ஜெ. பிறந்த நாளை கொண்டாடிய நீக்கப்பட்ட தொண்டர்கள்
கரூர்: சசிகலாவின் கணவர் நடராஜன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்றதற்காக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கரூர் அதிமுகவினர், ஜெயலலிதாவின் பிறந்த நாளை கோலாகலமாக கொண்டாடி அசத்தி விட்டனர்.
கடந்த டிசம்பர் 1 ம் தேதி ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் கரூரில் காவிரி நதி நீர் விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டை நடத்தினார்.
அதில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 100 - க்கும் மேற்பட்ட அதிமுகவி முக்கிய புள்ளிகள் கலந்து கொண்டனர். நடராஜனுக்கு பொன்னாடை போர்த்தி கெளரவித்து மகிழ்ந்தனர்.
இதனால் கடுப்பான ஜெயலலிதா, கட்சி கட்டுப்பாட்டை மீறியதாக கூறி கரூர் மாவட்டத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் 13 பேரை கட்சியை விட்டு நீக்கினார்.
ஆனால், கரூர் தொகுதி எம்எல்ஏ மற்றும் கரூர் மாவட்ட அதிமுக செயலாளரான உள்ள செந்தில் பாலாஜி தான் தலைமைக்கு தவறான தகவல் கொடுத்து பலரை நீக்கினார் என்று பாதிக்கப்பட்டவர்கள் போயஸ் தோட்டத்திற்கும், அதிமுக தலைமை அலுவலத்திலும் புகார்களை அனுப்பினர்.
இந்த நிலையில், ஜெயலலிதாவின் 60வது பிறந்த நாளை கட்சியில் உள்ள அதிமுகவினருக்கு நிகராக, கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அதிமுகவினர் படு சிறப்பாக கொண்டாடி அசத்தினர்.
இதில் பலரது கவனத்தையும் கவர்ந்தது விசு. சிவக்குமார் என்பவரது தலைமையில் சிலர் வைத்திருந்த டிஜிட்டல் பேனர்தான்.
மேலும் இவர்கள் குழுவாக ஒவ்வொரு பள்ளியாக சென்று அங்கு படிக்கும் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகம் வழங்கினர். கோவில்களிலும், தர்க்காவிலும், சர்ச்சிலும் சென்று சிறப்பு அபிஷேகமும், பிரார்த்தனையும் செய்தனர்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும் கூட 'அம்மா'வின் பிறந்த நாளைக் கொண்டாடிய இந்தப் 'பிள்ளை'களைப் பார்த்து மற்ற 'பிள்ளைகள்' சற்றே கடுப்பாகத்தான் இருந்தார்கள்.












Click it and Unblock the Notifications