கொசாவோ போல ஈழத்தையும் அங்கீகரிக்க புலிகள் கோரிக்கை
வவுனியா: மான்டிநீக்ரோ, கொசாவோ, கிழக்கு தைமூர் போல ஈழத்தையும் உலக சமுதாயம், தனி தேசமாக அங்கீகரிக்க வேண்டும் என்று விடுதலைப் புலிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ ஏடான விடுதலைப் புலிகள் இதழின் தலையங்கத்தில் இந்தக் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது:
உலக வரைபடத்தில், புதிய தேசம் ஒன்று உருவாகி விட்டது.
கொசோவோ என்ற அந்த இளைய தேசம் சுதந்திரப் பிரகடனம் செய்து தன்னை இறைமை உள்ள தனிநாடாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.
கொசோவோவின் விடுதலைப் பிரகடனத்தை உலகின் பல நாடுகள் வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளன.
புலிகள் இயக்கமும் அந்தப் புதிய தேசத்தை வாழ்த்தி வரவேற்கின்றது.
ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கும் தேசிய இனங்களுக்கு இந்தப் புதிய அரசின் பிறப்பு மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் வழங்கியுள்ளன.
செர்பிய அரசினதும்-அதன் படைகளினதும் இன அழிப்பிற்கு எதிராக போராடிய கொசோவோ மக்கள் இப்போது சுதந்திரமான கௌரவமான நிம்மதியான வாழ்க்கையைப் பெற்று விட்டார்கள்.
ஆனால், கொசோவோவின் சுதந்திரப் பிரகடனத்தை எதிர்ப்பதில் செர்பிய அரசுடன், இலங்கை அரசும் இணைந்து கொண்டது.
"உலக சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் பங்கம் விளைவிக்கும் செயல்" என்று அந்த சுதந்திரப் பிரகடனத்தை வர்ணித்துள்ள இலங்கை அரசின் கருத்து பிற்போக்குத்தனமானது. வஞ்சக நோக்கம் கொண்டது.
கொசோவோ - போஸ்னியா - குரோஷியா போன்ற சில தேசிய இனங்கள் செர்பிய அரசால் மிலேச்சத்தனமாக இனப்படுகொலை செய்யப்பட்ட போது உலகமே ஒன்றுதிரண்டு செர்பிய அரசைக் கண்டித்து அதற்கு எதிராக நடவடிக்கையிலும் இறங்கியிருந்தன.
அதன் தொடர்ச்சியாக அந்த தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை ஏற்றுக்கொண்டு செர்பிய அரசின் மரணப்பிடியிலிருந்து விலகி அவை தமது அரசியல் தலைவிதியை தீர்மானிக்க ஒத்தாசையாக இருந்து உலகம் உதவி புரிந்துள்ளது.
தற்போதைய உலக ஒழுங்கு தமது அடக்குமுறை ஆட்சி நிர்வாகத்திற்கு அனுசரணையாக உள்ளது என்று பல அரசுகள் நம்பியிருக்கின்றன.
ஆனால், அந்த அடக்குமுறை அரசுகளின் நம்பிக்கைகள் சிதையும் வகையில் உலக நடப்புகள் நடந்து வருகின்றன.
அடக்குமுறை அரசுகளுக்கும் இன அழிப்பு ஆட்சியாளர்களுக்கும் அனுசரணையாக புதிய உலக ஒழுங்கு எப்பொழுதும் இருக்கப் போவதில்லை என்ற அரசியல் யதார்த்தம் மெது மெதுவாக மேலெழுந்து வருகின்றது.
விடுதலை கோரிப் போராடிக் கொண்டிருக்கும் தேசிய இனங்களின் சுதந்திர தாகத்தை உலகம் அங்கீகரித்து அவை புதிய தேசங்களாக பரிணமிக்க உதவி வருகின்றன என்பது உண்மையாகும்.
இந்த உண்மையின் ஆதாரங்களாக மான்டிநீக்ரோ, கொசாவோ, கிழக்கு தைமூர் போன்ற தேசங்கள் மாறிவிட்டன. இன்னும் சில தேசிய இனங்கள் விடுதலையின் வாசலில் நிற்கின்றன.
உலக சமாதானத்திற்கும் பாதுகாப்பிற்கும் மக்கள் இனங்களின் சுதந்திரம் தான் உத்தரவாதம் அளிக்கக்கூடியது என்ற கருத்து புதிய உலக ஒழுங்கின் முக்கியமான அம்சமாக மாறி வருவது மகிழ்ச்சிக்கு உரியது.
எனினும், தேசிய இனங்களின் சுதந்திரம் என்ற அரசியல் விடயம் போல்க்கன் பிராந்தியத்தில் மட்டும் முனைப்புப் பெற்றிருக்கின்றது. இந்த அரசியல் சூழல் உலகின் ஏனைய பிராந்தியங்களுக்கும் பரவ வேண்டும் என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாகும்.
சமாதானத்தை விரும்பும் உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் - சர்வதேச மனித உரிமை அமைப்புக்களது கண்டனங்களையும் உதாசீனம் செய்தபடி சிங்கள அரசு- தமிழ் இன அழிப்பைத் தொடர்கின்றது.
சிங்களத்தின் இன அழிப்பு நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் உலகின், சக்தி வாய்ந்த சில நாடுகள் உதவிநிதி முடக்கம், ஆயுத ஏற்றுமதித்தடை போன்றவற்றை அமுல்படுத்தி சிங்கள அரசை வழிப்படுத்த முனைகின்றன.
ஈழத் தமிழினம் நீண்ட வரலாற்று பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு தேசிய இனம்.
சிங்கள அரசால் அது கடந்த அறுபது வருட காலமாக இன அழிப்பு செய்யப்பட்டு வருகின்றது.
இந்த அடக்குமுறைக்கு எதிராக சாத்தியமான அனைத்து வழிமுறைகளிலும் தமிழினம் போராடி வருகின்றது.
எனவே, மான்டிநீக்ரோ, கொசாவோ, கிழக்கு தைமூர் ஆகிய தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமையை அங்கீகரித்து ஆதரவு வழங்கியது போல தமிழரின் தன்னாட்சி உரிமையையும் அங்கீகரித்து ஆதரவு வழங்க உலகம் முன்வர வேண்டும் என்று தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தைக் கோருகின்றனர் என்று அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications