ராஜ்யசபா எம்பி தேர்தல்-7ம் தேதி திமுக கூட்டணி கூட்டம்
சென்னை: ராஜ்யசபா எம்பி தேர்தலில் சீட் ஒதுக்கீடு குறித்து முதல்வர் கருணாநிதி தலைமையில் வரும் 7ம் திமுக கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் நடைபெறவுள்ளது.
தமிழகத்தை சேர்ந்த ராஜ்யசபா எம்பிக்களான சண்முகசுந்தரம் (திமுக), ஜி.கே.வாசன் (காங்கிரஸ்), அதிமுக எம்பிக்கள் சையத் கான், தங்கத் தமிழ்ச்செல்வன், பெருமாள், வழக்கறிஞர் ஜோதி ஆகியோரின் பதவிக் காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது.
இதையடுத்து இந்த இடங்களுக்கு வரும் மார்ச் மாதம் தேர்தல் நடக்கவுள்ளது.
இப்போது சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்களின் எண்ணிக்கையின்படி திமுக கூட்டணிக்கு 4 எம்பிக்களும், அதிமுகவுக்கு 1 எம்பி கிடைப்பார். இதனால் ராஜ்யசபாவில் அதிமுகவுக்கு 3 எம்பிக்கள் குறையுவுள்ளனர்.
திமுக தரப்பு விட்டுத் தந்தால் அதிமுகவுக்கு இன்னொரு எம்.பி கிடைக்கலாம். இந்தக் கட்சிக்கு லோக்சபாவில் எம்பிக்களே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக ராஜ்யசபா எம்பி தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 8ம் தேதி தொடங்குகிறது. இந் நிலையில் 7ம் தேதி திமுக கூட்டணி கட்சித் தலைவர்களின் கூட்டத்தை, கருணாநிதி கூட்டியுள்ளார்.
காங்கிரஸ், பா.ம.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளுக்கு இதற்கான அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.
திமுக தனக்கு 2 இடங்களை எடுத்துக் கொண்டு காங்கிரஸ், பாமகவுக்கு தலா ஒரு இடங்களை ஒதுக்கும் என்று கூறப்படுகிறது.
காங்கிரஸை பொறுத்தவரை வாசனே மீண்டும் போட்டியிடக் கூடும்.