சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடலாம்-அரசு உத்தரவு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் திருச்சிற்றம்பல மேடை உள்ளது. இந்த மேடையில் இருந்தபடி பக்தர்கள் தேவராம், திருமறை ஆகியவற்றைப் பாடுவார்கள். ஆனால் இதற்கு கோவில் தீக்ஷிதர்கள் தடை போட்டு விட்டனர்.
இதை எதி்ர்த்து போராட்டங்கள் நடந்ததையடுத்து தேவாரம் பாடலாம், ஆனால் மேடையில் இருந்து பாடக் கூடாது, கீழே உள் மண்டபத்தில் இருந்தபடிதான் பாட வேண்டும் என்றனர்.
இந் நிலையில் திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம் என தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை ஆணையர் பிச்சாண்டி உத்தரவிட்டார்.
இதையடுத்து தீக்ஷிதர்கள் சார்பில் அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இந்த விவகாரத்தில் தமிழக அரசு முடிவு எடுத்து அறிவிக்கலாம் என தீர்ப்பளித்தது.
இதைத் தொடர்ந்து ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவை உறுதி செய்து அரசு மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதன்படி, கால பூஜை முடிந்த பின்னர், அடுத்த பூஜைக்கு இடையே உள்ள நேரத்தில் திருச்சிற்றம்பல மேடையில் இருந்தபடி 30 நிமிடங்களுக்கு தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடலாம். யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் இவற்றைப் பாடலாம் என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவாரம், திருமறை ஆகியவற்றைப் பாடப் போவது குறித்து முன்கூட்டியே கோவில் நிர்வாகத்திற்குத் தெரிவிக்க வேண்டும் எனவும் அந்த உத்தரவு தெரிவிக்கிறது.
இதன் மூலம் இதுவரை தேவாரம், திருமறை ஆகிய தமிழ்ப் பாடல்களைப் பாட முடியாமல் தவித்த வந்த பக்தர்களுக்கு பெரும் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக தீக்ஷிதர்கள் அடாவடியாக நடந்து கொள்வதாக கூறி பல்வேறு சிவாச்சாரியார்கள், தமிழ் அமைப்புகள் உள்ளிட்டவை பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தன என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications