மீண்டும் பாமக-திமுக மோதல்: ராமதாஸுக்கு டி.ஆர்.பாலு அட்வைஸ்!
சென்னை: முழு மது விலக்குப் பேசும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அந்தக் கருத்தில் தீவிரமாக இருந்தால், மத்திய அரசை வலியுறுத்தி நாடு முழுவதும் மது விலக்கை அமல்படுத்த முயற்சிக்க வேண்டும் என்று மத்திய கப்பல்துறை அமைச்சர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
தமிழகத்தில் முழு மது விலக்கை அமல்படுத்த வேண்டும். மது விலக்கை அமல்படுத்துவதால் அரசுக்கு ஏற்படும் நிதியிழப்பை சமாளிக்கத் தேவையான யோசனைகள், திட்டங்கள் என்னிடம் உள்ளது என்று கூறியிருந்தார் டாக்டர் ராமதாஸ்.
இதற்கு திமுக சார்பில் டி.ஆர்.பாலு பதிலளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், முழு மது விலக்கு குறித்து முதலில் மத்திய அரசிடம் பேசி, தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து நாடு முழுவதும் மது விலக்கை அமல்படுத்த பாமக முயற்சிக்க வேண்டும்.
நாடு முழுவதும் மது விலக்கு அமல்படுத்தப்பட்டால் அதை திமுக முழு மனதுடன் வரவேற்கும்.
மது விலக்கு என்பது தமிழ்நாடு மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினை அல்ல. இது வருவாய் குறித்த பிரச்சினையும் அல்ல. நாடு முழுவதும் மது விற்பனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மட்டும் மது விலக்கை அமல்படுத்தினால், அது கள்ளச்சாராய பெருக்கத்திற்கு வழி வகுக்கும்.
உண்மையில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். கூட முதல்வராக இருந்தபோது, இது தொடர்பாக ஒரு வார இதழில் கட்டுரை எழுதியிருந்தார். அதில், கள்ளச்சாராயப் பெருக்கம் அதிகரித்து விட்டதையும், கள்ளச்சாராயம் காய்ச்சியதாக 2 லட்சம் பேர் கைது செய்யப்பட்டதையும் காரணம் காட்டி, மது விலக்கை விலக்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று அவர் கூறியிருந்தார் என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் டி.ஆர்.பாலு.












Click it and Unblock the Notifications