பாக் தற்கொலைப் படை தாக்குதலில் 35 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த பழங்குடி இனத் தலைவர்கள் கூட்டத்தில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 35 பேர் கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் உள்ள தலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அப்பகுதியில் உள்ள டர்ரா ஆதம் கேல் என்ற இடத்தில் பழங்குடி இன மூத்தத் தலைவர்களின் கவுன்சில் கூட்டம் நடந்தது. இதில் 5 பழங்குடி இனங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு நிலைமை குறித்தும், அமைதி ஏற்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் ஆலோசிப்பதற்காக இந்த கூட்டம் நடத்தப்பட்டது.
சமீபத்தில் இந்தத் தலைவர்கள், தீவிரவாதிகளை தங்கள் பகுதியில் இருந்து கொண்டு தாக்குதல் நடத்த அனுமதிக்க மாட்டோம் என்று அறிவித்திருந்தனர். தீவிரவாதிகளுக்கு தங்கள் வீடுகளில் யாராவது அடைக்கலம் கொடுத்தால் அவர்களின் வீடுகளை தீவைத்து கொளுத்துவோம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த தீவிரவாத அமைப்புகளில் ஏதோ ஒன்று தற்கொலைப்படை தீவிரவாதியை அனுப்பி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் 35 பேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலியானவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி இனத்தலைவர்கள் ஆவர். இறந்தவர்களில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட 2 அரசியல் தலைவர்களும் அடங்குவர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.