ஆளுநர் மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த 3 வாலிபர்கள்
சென்னை: சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குள், சுவர் ஏறிக் குதித்த 3 வாலிபர்களைப் பாதுகாப்புப் படையினர் பிடித்தனர். அவர்கள் மன நிலை பாதிக்கப்பட்டவர்களைப் போல உள்ளதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
ஆளுநர் மாளிகையான ராஜ் பவன் உள்ளே இரவில் 2 பேர் சந்தேகத்திற்கு இடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து அவர்களை மத்திய தொழிலக பாதுகாப்புப் படையினர் பிடித்தனர். பின்னர் அவர்கள் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
போலீஸார், அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களது பெயர் குடுக் கொகியா, ரஞ்சித் சித்தார்டியா என்பது தெரிய வந்தது. இருவரும் ஒரிசாவைச் சேர்ந்தவர்கள். ஆளுநர் மாளிகைக்குப் பின்புறம் நடக்கும் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் ஆவர்.
ஏன் உள்ளே வந்தீர்கள் என்று கேட்டபோது, குடுக் கொகியாவின் தம்பி சித்திக் கொகியாவுக்கு மன நலம் சரியில்லையாம். இந்த நிலையில் அவர் ஆளுநர் மாளிகையின் சுவர் ஏறிக் குதித்து உள்ளே வந்து விட்டாராம். அவரைத் தேடித்தான் தாங்களும் வந்ததாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீஸார் ஆளுநர் மாளிகைக்குள் புகுந்த சித்திக்கைத் தேடினர். அவர் ஒரு மரத்தின் கீழ் படுத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரையும் மீட்டனர்.
3 பேரும் உள்நோக்கத்துடன் வரவில்லை என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. மேலும் மன நிலை பாதிக்கப்பட்டவர்கள் போலப் பேசுகின்றனர். எனவே அவர்களை எச்சரித்து அனுப்ப முடிவு செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.