சம்பத்தை அடித்தவர்களுக்கு மக்கள் பாடம்-வைகோ
வடசென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக் கூட்டத்தில் வைகோ பேசியதாவது,
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு கெட்டு விட்டது. ஜனநாயக முறைகள் மீறப்படுகின்றன. எதிர்கட்சியினர் தாக்கப்படுகிறார்கள். மதிமுகவை சேர்ந்த நாஞ்சில் சம்பத்தை மேடையேறி அடித்துள்ளனர். இதற்கெல்லாம் பாடம் புகட்ட மக்கள் தயாராகி வருகிறார்கள்.
சட்டசபையில் தனியாக சென்று புள்ளி விபரங்களோடு பேசி உள்ளார் ஜெயலலிதா. அவருக்கு அச்சம் கிடையாது. ஜெயலலிதாவுக்கு பதில் சொல்லாமல் அவரை இழிவுபடுத்தி பேசியுள்ளனர்.
அதிமுக-மதிமுக கூட்டணி வலுவாக உள்ளது. ஒருத்தருக்கு பிரச்சனை என்றால் மற்றவர் முன்னால் வந்து நிற்போம். காவிரி உள்ளிட்ட பல பிரச்சினைகளில் நமது உரிமைகளை காத்தவர் ஜெயலலிதா.
ஆனால் இன்று அந்த நிலைமை இல்லை. முல்லை பெரியாறு விவகாரத்தில் இந்த அரசு பின் வாங்குகிறது.
மத்திய பட்ஜெட்டில் விவசாய கடன்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருப்பது ஏமாற்று வேலை. இதனால் பாங்கிகள் ஸ்தம்பித்து விடும்.
நாடாளுமன்றத்துக்கு இந்த வருடம் இறுதியில் தேர்தல் வரும். அதையொட்டி சட்டமன்றத்துக்கும் தேர்தல் வரும். ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவோம் என்றார் வைகோ.
மதிமுக நிர்வாகிகள் நீக்கம்:
இதற்கிடையே தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் பா.மு. பாண்டியன் மற்றும் கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினர் கே. சந்திரன் ஆகிய இருவரும் கழகக் கட்டுப்பாட்டை மீறியும்,
கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையிலும் நடந்து கொள்வதால் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அவர்கள் வகித்து வரும் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள் என வெளியிட்டு்ள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.