ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு சபை புதிய தடை விதிப்பு
நியூயார்க்: ஈரான் மீது ஐ.நா. பாதுகாப்பு சபை புதிய தடைகளை அறிவித்துள்ளது. மேலும் தற்போது அமலில் உள்ள தடைகளையும் அது கடுமையாக்கியுள்ளது.
ஈரான் தனது யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தைக் கைவிடாததால் அந்த நாட்டின் மீது ஏற்கனவே ஐ.நா. பாதுகாப்பு சபை தடை விதித்துள்ளது. இந்த நிலையில் புதிய தடைகளை ஐ.நா. பாதுகாப்பு சபை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக கூட்டப்பட்ட பாதுகாப்பு சபை கூட்டத்தில் மொத்தம் உள்ள 15 உறுப்பு நாடுகளில் 14 நாடுகள், தடைக்கு ஆதரவாக வாக்களித்தன. இந்தோனேசியா வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் நடுநிலை வகித்தது.
முதல் முறையாக ஈரான் மீது வர்த்தக தடையையும் பாதுகாப்பு கவுன்சில் விதித்துள்ளது. இதன் மூலம் ஈரானுடன் பிற நாடுகள் வர்த்தக ரீதியிலான தொடர்பு வைத்துக் கொள்ள தடை விதிக்கப்படுகிறது. அணு சக்தி தொடர்பான வர்த்தகம் தவிர பொதுவான சிவில் வர்த்தகமும் கூட தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈரானிலிருந்தும், பிற நாடுகளிலிருந்து ஈரானுக்கும் செல்லும் கப்பல்களை கண்காணிக்கவும், சோதனையிடவும் இந்த தடை உத்தரவு வழி செய்கிறது. மேலும் ஈரானுக்கு செல்லும், அங்கிருந்து வரும் விமானங்களும் சோதனையிடப்படும்.
தடை குறித்த செய்தியை ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளின் சார்பில் இங்கிலாந்து தூதர் ஜான் சேவர்ஸ் வாசித்தார். அவர் கூறுகையில், யுரேனியம் செறிவூட்டும் திட்டத்தை ஈரான் கைவிட வேண்டும். அதை கைவிட்டால் இந்த தடைகள் தானாக விலகும்.
இதுதொடர்பான பிரச்சினைக்குத் தீர்வு காண ஐரோப்பிய யூனியன் வெளியுறவுக் கொள்கைக்கான தலைவர் ஜேவியர் சொலானோ ஈரான் தரப்பு பேச்சுவார்த்தைக் குழுத் தலைவர் சயீத் ஜலிலியை சந்தித்துப் பேசவுள்ளார் என்றார்.
ஈரான் நிராகரிப்பு:
இந்தப் புதிய தடைக்கு ஈரான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதை நிராகரிப்பதாக அது தெரிவித்துள்ளது. இந்த தடை சட்டவிரோதமானது, இதை ஏற்க மாட்டோம் எனவும் அது கூறியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளும் கூட இந்தத் தடைக்கு அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்தப் புதிய தடை மூலம் ஈரானுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையிலான விரிசல் மேலும் அதிகரிக்கும், புதிய மோதல்கள் உண்டாகும் என அவை அச்சம் தெரிவித்துள்ளன.