எம்பி பதவி: திமுக-பாமக மோதல் உச்சகட்டம்!
தமிழகத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவைச் சேர்ந்த என்.ஜோதி, சி.பெருமாள், சையது கான், தங்க தமிழ்ச்செல்வன், திமுகவைச் சேர்ந்த சண்முக சுந்தரம், காங்கிரஸைச் சேர்ந்த ஜி.கே.வாசன் ஆகியோரது பதவிக் காலம் முடிவடைகிறது.
இதையடுத்து இந்த 6 இடங்களுக்கும் வரும் 26ம் தேதி தேர்தல் நடக்கவுள்ளது. 8ம் தேதி வேட்பு மனுத்தாக்கல் தொடங்குகிறது. தமிழக சட்டசபையில் உள்ள எம்எல்ஏக்கள் வாக்களித்து இந்த எம்பி்க்களைத் தேர்வு செய்வர்.
ஒரு எம்பியை தேர்ந்தெடுக்க 34 எம்எல்ஏக்களின் வாக்குகள் தேவை. தற்போதைய கணக்குப்படி திமுக கூட்டணிக்கு 165 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் இந்தக் கூட்டணிக்கு 4 எம்பிக்கள் கிடைப்பர். அதில் ஒன்றை காங்கிரசுக்கு கொடுத்துவிட்டு 3 பதவிகளை தானே எடுத்துக் கொள்ள திமுக நினைக்கிறது.
அதிமுகவுக்கு ஒரு எம்பி பதவி மட்டுமே உறுதியாகக் கிடைக்கும். மதிமுக வாக்குகளையும் சேர்த்தாலும் அக் கட்சியின் 2வது வேட்பாளர் வெல்ல வேண்டுமானால் மேலும் 2 எம்எல்ஏக்களின் வாக்குகள் வேண்டும்.
காங்கிரசுக்கு 35 எம்எல்ஏக்கள் உள்ளனர். இதனால் அக்கட்சிக்கு ஒரு இடத்தை திமுகவிடம் நிச்சயமாக பெற்று வென்றுவிடும்.
இந் நிலையில் 18 எம்எல்ஏக்களை வைத்துள்ள தங்கள் கட்சிக்கும் ஒரு எம்பி பதவியை பெற்றே தீருவது என்பதில் பாமக தீவிரமாக உள்ளது. சமீபத்தில் முதல்வர் கருணாநிதியை ராமதாஸ் சந்தித்தது கூட இந்த எம்பி பதவிக்காகத் தான்.
ஆனால், பாமகவுக்கு ஒரு பதவியை விட்டுத் தர திமுக தயாராக இல்லை.
இந் நிலையில் பாமக தலைவர் ஜி.கே.மணி கடந்த இரு தினங்களாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து எம்பி பதவி தொடர்பாக பேசினார். ஆனால், திமுக விட்டுத்தராததால் பேச்சுவார்த்தையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாமக கடும் கோபத்தில் உள்ளது.
இது தவிர 9 எம்.எல்.ஏ.க்களை கொண்டுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும் ஒரு எம்பி பதவியைக் கேட்கிறது.
அதே போல நேற்று முதல்வர் கருணாநிதியுடன் பேச்சு நடத்திய சோனியா காந்தி, காங்கிரசுக்கு மேலும் ஒரு இடம் கேட்டதாகவும் கூறப்படுகிறது.
திமுக கூட்டணி கூட்டம் தள்ளிவைப்பு:
இந்தக் குழப்பங்களால் வரும் 7ம் தேதி நடக்கவிருந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தை திமுக திடீரென ரத்து செய்துவிட்டது.
இதுகுறித்து திமுக தலைமைக் கழகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், 7ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுவதாக இருந்த தோழமைக் கட்சித் தலைவர்களின் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தேர்தலுக்கு 8ம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்குவது குறிப்பிடத்தக்கது.