'திவால்' ஜெயப்பிரதாவின் எம்.பி பதவிக்கு ஆபத்து!

நடிகையும், சமாஜ்வாடி கட்சி எம்பியுமான ஜெயப்பிரதா சார்பில் அவரது சகோதரர் ராஜ்பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
அதில் ஒரு மனுவில்,
சினிமா துறையில் உள்ள கோபாலகிருஷ்ணன் என்பவர் ரூ.6 லட்சம் கடன் தொடர்பாக ஜெயப்பிரதா, ராஜ்பாபு ஆகியோர் மீது ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து திவால் ஆனவர்களாக அறிவிக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்திருந்தார்.
எங்களுக்கு பலமுறை சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டும், பல்வேறு காரணங்களாக இந்த வழக்கில் ஆஜராக முடியவில்லை.
எனவே, கடந்த 2006ம் ஆண்டு எங்களை உயர் நீதிமன்றம் ஒருதலைபட்சமாக திவால் ஆனவர்களாக அறிவித்துவிட்டது.
ஆனால், திவால் ஆனவர்களாக அறிவிக்கப்பட்டும் அது தொடர்பாக 'லிக்யூடேட்டர்' எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
திவால் ஆனதாக அறிவிக்கப்பட்டதால் ஜெயப்பிரதாவின் எம்.பி. பதவி பறிபோகும் அபாயம் உள்ளது. ஆகவே, திவால் ஆனவர்களாக அறிவித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
தியேட்டர்கள் ஜப்தி நிறுத்த கோரிக்கை:
ஜெயப்பிரதாவுக்கு சென்னையில் இரு தியேட்டர்கள் உள்ளன. இதற்கு ரூ. 20 லட்சம் சொத்துவரி பாக்கி உள்ளது.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை மாநகராட்சி இந்த தியேட்டர்களை ஜப்தி செய்து பொருட்களை கைப்பற்றியது.
இந் நிலையில் சொத்துவரி தொடர்பாக நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதால் இந்த ஜப்தி நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என ஜெயப்பிரதா சார்பில் அவரது சகோதரர் சென்னை சிவில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மாநகராட்சி சார்பில் வாதாடிய வழக்கறிஞர்,
இந்த மனு விசாரணைக்கே ஏற்றதல்ல. ஏற்கனவே ஜெயப்பிரதா தான் பிரதான வழக்கை தொடர்ந்துள்ளார். அப்படியிருக்க, ராஜ்பாபு மனு தாக்கல் செய்தது சரியல்ல. இந்த மனுவை தாக்கல் செய்ய ஜெயப்பிரதா இவருக்கு அதிகாரம் வழங்கவில்லை.
தியேட்டர் பங்குதாரர்கள் இருவரும் திவால் ஆகிவிட்டார்கள் என்று மாநகராட்சிக்கு கடிதம் தந்துவிட்ட நிலையில் ராஜ் பாபு மனு தாக்கல் செய்ய முடியாது.
சொத்து வரிக்காக மாநகராட்சிக்கு ரூ.5 லட்சத்திற்கு ஜெயலலிதா தந்த இரு செக்குகள் பணம் இல்லாமல் அந்த பவுன்ஸ் ஆகிவி்டடன.
மேலும் ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுவிட்டது. அப்படியிருக்கையில் அதை நிறுத்தி வைக்க முடியாது என்றார்.
ராஜ்பாபு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜப்தி நடவடிக்கையை நிறுத்தி வைக்கக் கோரி வாதாடினார்.
இதையடுத்து இந்த வழக்கில் தீர்ப்பை நீதிபதி வரும் வெள்ளிக்கிழமைக்கு தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications