எம்பி தேர்தல்: கருணாநிதியுடன் சோனியா ஆலோசனை
தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பிக்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அந்த இடத்திற்கு வருகிற 26ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்தத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் 4 இடங்களிலும், அதிமுக சார்பில் 2 இடங்களிலும் வெற்றி பெற முடியும். மீதமுள்ள இடத்தில் வெல்ல இரு கூட்டணிகளுக்கும் போதிய பலம் இல்லை. எனவே கட்சி மாறி வாக்களித்தால் மட்டுமே அந்த இடத்தில் வெல்ல முடியும்.
கடைசி இடத்தைப் பிடிக்க அதிமுக கூட்டணிக்கு 2 எம்.எல்.ஏக்கள் கூடுதலாக தேவை, திமுக கூட்டணிக்கு 3 பேர் தேவை. இதனால் தேர்தல் களம் பரபரப்பாகியுள்ளது.
சீட் வாங்க இரு அணிகளிலும் போட்டிகள் தொடங்கியுள்ளன. திமுக தரப்பில் கவிஞர் வைரமுத்து, கவிஞர் தமிழச்சி பாண்டியன் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன.
காங்கிரஸ் தரப்பில் 2 சீட் கேட்கப்படுகிறது. மற்ற கட்சிகளும் கூட சீட் கேட்கின்றன.
இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நேற்று முதல்வர் கருணாநிதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நேற்று மதியம் நடந்த இந்தப் பேச்சின்போது ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.