மனநிலை பாதிக்கப்பட்டவர் தாக்கி வாலிபர் சாவு
சென்னை: மன நிலை பாதிக்கப்பட்டவரால் தாக்கப்பட்டு உயிரிழந்த ஏழை வாலிபரின் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம் நிவாரண நிதி அளிக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,
திருக்கழுக்குன்றம் அருகே மீனவர் குப்பத்தைச் சேர்ந்த லோகு என்பவரின் மகன் 29 வயதான முருகன் கடந்த மாதம் 25ம் தேதி மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்னை நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது,
மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் அதே சாலையில் சென்று கொண்டிருந்த ஆஸ்திரிய நாட்டுச் சுற்றுலாப் பயணி இம்லிங்கர் என்பவரைக் கல்லால் அடிக்க முற்பட்டார்.
அதைத் தடுத்து மனிதாபிமான உணர்வோடு சுற்றுலாப் பயணியைக் காப்பாற்றச் சென்றபோது, மனநிலை பாதிக்கப்பட்டவரால் தாக்கப்பட்டு முருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த துயர நிகழ்வு குறித்த செய்தி கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து, அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த முதல்வர் கருணாநிதி உயிரிழந்த முருகனின் குடும்பத்தாருக்கு ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன்,
அவரது மனிதாபிமான உணர்வைப் போற்றியும், அவரது பெற்றோரின் முதுமை மற்றும் ஏழ்மை நிலையைக் கருதி, அவரது குடும்பத்திற்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கிட ஆணையிட்டுள்ளார் என கூறப்பட்டுள்ளது.