பெண்களுக்கு காண்டம் - 5 ரூபாய்க்குக் கிடைக்கும்
டெல்லி: எய்ட்ஸ் பரவலைத் தடுக்க பெண்கள் பயன்படுத்தும் வகையிலான கருத்தரிப்பு சாதனங்களை குறைந்த விலைக்கு விற்க மத்திய சுகாதாரத் துறை திட்டமிட்டுள்ளது. இந்த கருத்தரிப்பு சாதனம் 5 ரூபாய்க்கு விற்கப்படும்.
தமிழ்நாடு, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் எய்ட்ஸ் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
விழிப்புணர்ச்சி பிரசாரமும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பிரசாரங்களில் ஆணுறையின் பயன்பாடு அதிக அளவில் வலியுறுத்தப்படுகிறது. ஆனால் பல ஆண்கள், ஆணுறையை பயன்படுத்த விரும்புவதில்லை.
இதையடுத்து பெண்கள் பக்கம் தனது பார்வையைத் திருப்பிய சுகாதாரத் துரை இப்போது, பெண்களுக்காகவே தயாரிக்கப்பட்டிருக்கும் கருத்தரிப்பு உறைகளை விற்பனையில் விட தீர்மானித்துள்ளது.
இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் இந்த பெண்களுக்கான காண்டம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் இன்னும் பெரிய அளவில் பாப்புலர் ஆகவில்லை.
தற்போது இங்கிலாந்திலிருந்து 15 லட்சம் பெண்களுக்கான காண்டத்தை தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம் இறக்குமதி செய்யவுள்ளது.
இந்த கருத்தரிப்பு சாதனத்தின் விலை ரூ. 5 மட்டுமே இருக்கும்.
முதல் கட்டமாக தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் இது விற்பனைக்கு விடப்படும். அதன் பின்னர் மற்ற மாநிலங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.