அரசு பஸ்களில் போலி டிக்கெட்-2 கண்டக்டர்கள் கைது!
சென்னை: சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் டிக்கெட்டுக்களை போலியாக அச்சடித்துப் புழக்கத்தில் விட்ட இரண்டு கண்டக்டர்கள் சிக்கியுள்ளனர். இந்த மோசடியில் மேலும் பல கண்டக்டர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சென்னை நகரப் பேருந்துகளில் பெருமளவில் போலி டிக்கெட்டுக்கள் நடமாடுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டனர்.
இந் நிலையில் 57ம் எண் பேருந்தில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அந்தப் பேருந்தின் கண்டக்டர் வைத்திருந்த டிக்கெட்டுக்கள் போலியானவை என்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கி விட்டனர்.
இந்த விசாரணையில், போலி டிக்கெட்டுக்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டதாக சுப்ரமணி என்ற கண்டக்டர் சிக்கினார். இவர் வியாசர்பாடியைச் சேர்ந்தவர். ஏற்கனவே இப்படி போலி டிக்கெட் அச்சடித்து விட்டு சஸ்பெண்ட் ஆனவர்.
மீண்டும் பணியில் சேர்ந்தவுடன் மறுபடியும் போலி டிக்கெட்டுக்களை புழக்கத்தில் விட்டுள்ளார்.
இவருடைய வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் போலி டிக்கெட்டை வடிவமைத்து அதை வெளியி்ல் அச்சிட்டு புழக்கத்தில் விட்டுள்ளார் சுப்ரமணி. இவருடன் இன்னொரு கண்டக்டரும் சிக்கியுள்ளார்.
ஆனால் இவர்கள் மட்டுமல்லாது மேலும் பல கண்டக்டர்களும் இந்த மோசடி வேலையில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். பிடிபட்ட இருவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.
இதில் இதுவரை லட்சக்கணக்கில் மோசடி நடந்திருக்கலாம் எனத் தெரிகிறது.