தனி தெலுங்கானா-ஆந்திராவை பிரிக்க பாபா எதிர்ப்பு
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தை இரண்டாகப் பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க சாய் பாபா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
தனி தெலுங்கானா மாநில கோரிக்கை மீண்டும் சூடு பிடித்துள்ளது. இந்தக் கோரி்க்கையை வலியுறுத்தி தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி எம்பிக்கள், எம்எல்ஏக்கள், எல்எல்சிக்கள் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.
இந்தக் கோரிக்கைக்கு தெலுங்கானா பகுதி மக்களிடமும் பெரும் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், புட்டபர்த்தியில் சத்ய சாய்பாபா கூறுகையில்,
ஆந்திராவை தெலுங்கானா, ராயலசீமா என்று தனித் தனியாக பிரிக்க வேண்டும் என்று சிலர் போராடி வருகிறார்கள். ஒரு சிலரது சுயநலம் காரணமாகத் தான் தனி மாநில கோரிக்கை எழுந்தது. போராட்டமும் நடந்து வருகிறது.
ஆந்திராவை துண்டு துண்டாக பிரித்தால் மாநிலத்தின் முன்னேற்றம் கடுமையாக பாதிக்கப்படும். ஒன்றாக சேர்ந்து இருந்தால் பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைய முடியும்.
எனவே தனி மாநில பிரிவினை போராட்டத்தை யாரும் ஆதரிக்கக் கூடாது. பிரிவினைவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது. ஒற்றுமையாக இருந்தால் நிறைய சாதிக்கலாம்.
மாநிலத்தைப் பிரித்தால் அது பெரிய பாவம் என்றார்.
சாய்பாபாவின் இந்தப் பேச்சுக்கு தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அக் கட்சியின் தலைவரான சந்திரசேகர் ராவ் கூறுகையில், பாபா தன்னை மதம் தொடர்பான விஷயங்களுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியலில் தலையிடக் கூடாது.
தெலுங்கானாவில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டபோது இந்த பாபாக்கள் எங்கிருந்தார்கள்?.
பாபா நேரடியாக அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறோம். அதை விட்டுவிட்டு அரசியல் கருத்துக்கள் தெரிவிப்பதை ஏற்க முடியாது என்றார்.