For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'அண்ணாச்சி' ராஜகோபாலுடன் வாழ விரும்பவில்லை- கிருத்திகா

By Staff
Google Oneindia Tamil News

Kiruthiga
சென்னை: சரவண பவன் ஹோட்டல் அதிபர் ராஜகோபாலுடன் வாழ விரும்பவில்லை என்று அவரது 2வது மனைவி கிருத்திகா, போலீஸில் தெரிவித்துள்ளார். இருப்பினும் 2 நாள் அவகாசம் தருவதாகவும், யோசித்து முடிவைக் கூறுமாறும் கூறி அவரை போலீஸார் அனுப்பி வைத்துள்ளனர்.

சரவண பவன் ராஜகோபாலின் 2வது மனைவி கிருத்திகா. ஜீவஜோதி விவகாரம் வெடித்தபோதுதான் கிருத்திகா விவகாரம் வெளியே தெரிய வந்தது.

கிருத்திகாவுடன் ஆரம்பத்தில் சுமூகமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தார் ராஜகோபால். ஆனால் சமீப காலமாக அவர்களுக்குள் பூசல் ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர்.

இந் நிலையில் சில நாட்களுக்கு முன்பு ராஜகோபால், மாநகர காவல்துறை ஆணையரை சந்தித்து ஒரு மனு கொடுத்தார். அதில் வழக்கறிஞர் ராஜேந்திரனின் கட்டுப்பாட்டில் தனது மனைவி இருப்பதாகவும், மீட்டுத் தர வேண்டும் என்றும் கோரியிருந்தார்.

அடுத்த நாளே கிருத்திகாவும் வந்து புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதில், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியிருந்தார். பாதுகாப்பும் கோரியிருந்தார்.

இரு தரப்பு புகார்களையும் மாம்பலம் துணை ஆணையர் லட்சுமியிடம் ஆணையர் அனுப்பி வைத்து விசாரிக்க உத்தரவிட்டார்.

யானை ராஜேந்திரன்:

அதன்படி முதலில் ராஜகோபாலிடம் விசாரணை நடந்தது. அப்போது அவர் மனம் விட்டு பல விஷயங்களைக் கூறினார். சிறு சிறு பிரச்சினைக்காக கோபித்துக் கொண்டு போய் விட்டார் கிருத்திகா. அவரது வக்கீல் யானை ராஜேந்திரன் சொல்வதைக் கேட்டுக் கொண்டு என் மீது பொய்யான புகாரைக் கொடுத்துள்ளார்.

இப்போது அவரது பாட்டி வீட்டில்தான் இருக்கிறார். பாட்டி வீட்டுக்கான செலவுகளை இதுவரை நான்தான் கவனித்துக் கொண்டு வருகிறேன். இதை அவரது பாட்டியிடமே கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் என்று கூறியிருந்தார் ராஜகோபால்.

இந் நிலையில், நேற்று கிருத்திகாவை அழைத்துப் போலீஸார் விசாரித்தனர். இதற்காக யானை ராஜேந்திரனுடன் கிருத்திகா துணை ஆணையர் லட்சுமி முன்பு ஆஜரானார். ராஜேந்திரனை வெளியே போகுமாறு கூறிய துணை ஆணையர், கிருத்திகாவை மட்டும் அமர வைத்து விசாரித்தார்.

அப்போது துணை ஆணையர் லட்சுமியிடம் கிருத்திகா கூறுகையில், எனக்கும், ராஜகோபாலுக்கும் 1993ம் ஆண்டு கல்யாணம் நடந்தது. அப்போது அவருக்கு முதல் மனைவி இருந்தது எனக்குத் தெரியாது. அதை மறைத்து விட்டுத்தான் என்னை மணந்து கொண்டார் ராஜகோபால்.

சந்தேகப்படுகிறார்:

கல்யாணத்திற்குப் பிறகு ஆரம்பத்தில் நன்றாகத்தான் இருந்தது. ஆனால் சமீப காலமாக அவருக்கு என் மீது சந்தேகம். எதற்கெடுத்தாலும் கேள்வி கேட்கிறார். ஒவ்வொரு செலவுக்கும் கணக்கு கேட்கிறார்.

அவராலும், அவரது ஆட்களாலும் எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்ற அச்சம் உள்ளது. இனிமேலும் அவருடன் சேர்ந்து வாழ முடியாது. சேர்ந்து வாழவும் விரும்பவில்லை என்றார் கிருத்திகா.

இதையடுத்து இந்த விவகாரத்தில் சமரசமாகப் பேச ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம். அதையும் வேண்டாம் என்று கூறினால் சட்டப்பூர்வமாக என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம் என போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இதையடுத்து 2 நாட்களில் இதுகுறித்துக் கூறுவதாக கூறி விட்டு கிருத்திகா கிளம்பினார்.

கிருத்திகா தனது முடிவைச் சொன்னதும், ராஜகோபாலையும், கிருத்திகாவையும் ஒன்றாக அமர வைத்து விசாரிக்கப்படும் எனத் தெரிகிறது.

சரவண பவன் ஹோட்டலில் முறுக்கு போட வந்த ஊழியரின் மனைவி தான் கிருத்திகா என்பது குறிப்பிடத்தக்கது. அவரை மிரட்டி விரட்டுவிட்டு கிருத்திகாவை அண்ணாச்சி மடக்கினார் என்பது பழைய கதை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X