மீனவர் கிறிஸ்டியை இலங்கை கடற்படை சுடவில்லை-தூதரகம் மறுப்பு
சென்னை: ராமேஸ்வரத்தில் துப்பாக்கி குண்டுக்குப் பலியான மீனவர் கிறிஸ்டியின் மரணத்திற்கு இலங்கை கடற்படை காரணம் அல்ல. விடுதலைப் புலிகள்தான் காரணம் என்று சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் அறிக்கை விட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கை துணைத் தூதர் அம்சா வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை கடற்படையினரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் தமிழக மீனவர் ஒருவர் உயிரிழந்ததாகவும், ஒருவர் படுகாயமடைந்தாதகவும் வந்த தகவலை உடனடியாக இலங்கை கடற்படையினரின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம்.
அதுதொடர்பாக கடற்படையின் சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையில், துப்பாக்கிச் சூடு நடந்த கடற் பகுதியில், இலங்கைக் கப்பல்கள் எவையும் அந்த சந்தர்ப்பத்தில் செல்லவில்லை என்று கடற்படை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மேலும் தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள இந்தக் குற்றச்சாட்டுக்களை இலங்கை கடற்படை ஆணித்தரமாகவும், சந்தேகத்துக்கு இடமின்றியும் மறுத்துள்ளது.
அத்துடன், கடந்த மாதத்தில், நடந்த சம்பவம் உள்பட பல்வேறு சந்தர்ப்பங்களில் சிரமங்களுக்கு உள்ளாகி தத்தளித்த தம்மைக் காப்பாற்றி உதவியவர்கள் இலங்கை கடற்படையினர்தான் என்று தமிழக மீனவர்களே ஏற்றுக் கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் இலங்கை கடற்படையினரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் தீய நோக்குடன் தமிழீழ விடுதலைப் புலிகள் இத்தகைய தாக்குதல்களை கடந்த காலங்களில் மேற்கொண்டு வந்துள்ளதையும் நினைவூட்ட விரும்புகிறோம் என்று அதில் அம்சா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications