மலேசியாவில் நாளை தேர்தல்

இந் நிலையில், தேர்தல் ஆணையரின் வீட்டை ஒரு கும்பல் சூறையாடி, ரகளையில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசியாவில் தற்போது உள்ள நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் முடிய இன்னும் ஒரு ஆண்டு உள்ளது. இருப்பினும் தமிழர்களிடையே காணப்படும் அரசுக்கு எதிரான அலை உள்ளிட்ட காரணத்திற்காக தேர்தலை முன் கூட்டியே நடத்த வசதியாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது.
நாளை அங்கு நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைகளுக்கும் தேர்தல் நடைபெறவுள்ளது.
சுதந்திரம் பெற்றது முதல் கடந்த 50 ஆண்டு காலமாக மலேசியாவை பாரிசன் நேசனல் கட்சி தான் ஆண்டு வருகிறது. இந்த முறையும் அந்தக் கட்சியே வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இதுவரை கிடைத்த பெரிய அளவிலான வெற்றி கிடைக்காது என்று தெரிகிறது.
தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் மற்றும் சீனர்களின் எதிர்ப்பலை நிலவுவதால் அக் கட்சிக்கு பெரிய அளவில் சரிவு ஏற்படலாம்.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துள்ள நிலையில் இன்று அந்த நாட்டு தேர்தல் ஆணையர் அப்துல் ரஷீத் ரகுமான் வீட்டை சிலர் சூறையாடி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
ரகுமானின் வீட்டுக்குள் புகுந்த கும்பல் பொருட்களை எல்லாம் அடித்து உடைத்தனர். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து ஓடி விட்டது.
யார் இந்தக் கும்பல் என்று தெரியவில்லை. ஆனால் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களாக இருக்கக் கூடும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தேர்தலில் மோசடி நடக்காது-துணைப் பிரதமர்
இதற்கிடையே, தேர்தலில் எந்தவித முறைகேடும் நடக்காது என்று துணைப் பிரதமர் நஜீப் துன் ரஸ்ஸாக் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தேர்தல் வெளிப்படையாக நடைபெறும். எந்தவித மோசடியும் நடக்காது. அதில் யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
தேர்தல் ஆணையம் சுயேச்சையான ஒரு அமைப்பு. நியாயமாகவும், நேர்மையாகவும் அது நடக்கும். எந்த வேட்பாளரின் வெற்றியையும் தேர்தல் ஆணையம் தடுக்க முயற்சிக்காது.
கையில் வைக்கப்படும் அழியாத மையில் மோசடி நடந்திருப்பதாகவும், மையை அழிக்கக் கூடிய வகையில் அது தயாரிக்கப்பட்டிருப்பதாகவும், இதன் மூலம் பெருமளவில் கள்ள ஓட்டுப் போட முயற்சிகள் நடப்பதாகவும் சிலர் கூறியிருப்பது தேவையற்றது. அப்படி எதுவும் நடக்கவில்லை.
வாக்காளர்கள் எந்தவிதப் பயமும் இல்லாமல் வாக்களிக்கச் செல்லலாம். வாக்காளர்களுக்கு அனைத்து விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
வாக்காளர்களை யாரேனும் மிரட்டினாலோ அல்லது தடுத்தாலோ அவர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications