கைதி கணேசனை ஆஜர்படுத்தக் கோரி புது வழக்கு
சென்னை: வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி கணேசனை சந்திக்க அனுமதி தருமாறு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக் கோரி அவரது வழக்கறிஞர் அய்யப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்திய வழக்கு, கைதி கணேசன் மற்றும் அவரது மனைவியாக கூறப்பட்ட நதியாவின் விவகாரம்.
தனது மனைவி நதியாவை சிறை ஊழியர்கள் நான்கு பேர் கற்பழித்து விட்டதாக கூறி கணேசன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் நதியாவை உயர்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார், அவர் கன்னித் தன்மையை இழக்காதவர் என்பதை நிரூபிக்கும் மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்தனர். மேலும், நதியாவின் தாயாரும் தனது மகளுக்கு கல்யாணமே ஆகவில்லை என்று தெரிவித்தார். இதனால் வழக்கில் பெரும் குழப்பம் ஏற்பட்டது.
கைதி கணேசனின் வக்கீல்களை கண்டித்த உயர்நீதிமன்றம், இதுதொடர்பாக விசாரணை நடத்தி, யார் தவறு செய்தார்களோ அவர்கள் மீது வழக்கு தொடருமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
ஆனால் கைதி கணேசனுக்கும், நதியாவுக்கும் இருந்த தொடர்புகளை வெளிப்படுத்தும் வகையிலான புகைப்பட ஆதாரங்களும், கணேசனுக்கு நதியா எழுதிய காதல் கடிதங்களும் வெளியாகி புதிய பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பான உண்மைகளை அறிய உண்மை கண்டறியும் குழுவினர் களம் இறங்கினர். நதியா, கணேசன் ஊர்களுக்குச் சென்று விசாரித்த இக்குழுவினர், கணேசனையும் சந்திக்க முயன்றனர். ஆனால் அவர்களுக்கு சிறை நிர்வாகம் அனுமதி தரவில்லை.
இந்த நிலையில் கணேசனின் வழக்கறிஞர் அய்யப்பன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அதில், கணேசனுக்கு சிறையில் பெரும் சித்திரவதை நடக்கிறது. தினசரி அவரை சிறை அதிகாரிகள் அடித்துத் துன்புறுத்தி வருகின்றனர். ஹேபியஸ் கார்பல் மனுவைத் தாக்கல் செய்தற்காக அவரை சித்திரவதை செய்து வருகின்றனர்.
அவரை சித்திரவதை செய்வதை யாரும் பார்த்து விடக் கூடாது என்பதற்காக கணேசனை மற்ற கைதிகளிடமிருந்து பிரித்து தனியாக வைத்து துன்புறுத்தி வருகின்றனர்.
அவரை சந்திக்க எனக்கு சிறை நிர்வாகம் அனுமதி தர மறுக்கிறது. கணேசன் விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். நதியா கற்பழிக்கப்பட்டாரா, இல்லையா என்பது குறித்து அறியவும் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
நதியா கற்பழிக்கப்படவில்லை என்று போலீஸார் தாக்கல் செய்த மருத்துவ சான்றிதழ் போலியானது. எனவே அந்த போலி சான்றிதழைக்க கொடுத்த வேலூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவும் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்த மனு மீதான விசாரணை மார்ச் 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications