நான் உளவாளி அல்ல-காஷ்மீர் சிங் மறுப்பு
சண்டிகர்: இந்திய உளவாளியாக தான் செயல்பட்டதாக வெளியான செய்தியை காஷ்மீர் சிங் மறுத்துள்ளார்.
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசைச் சேர்ந்த போலீஸ்காரர் காஷ்மீர் சிங். இவரை, கடந்த 1973ம் ஆண்டு உளவு பார்த்ததாக பாகிஸ்தான் அவரை கைது செய்தது.
35 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டு சமீபத்தில் இந்தியா திரும்பினார் சிங். 67 வயதாகும் சிங், இந்தியா திரும்பிய பின்னர் அளித்த ஒரு பேட்டியில், நாட்டுக்கு சேவை செய்ய பாகிஸ்தானுக்கு உளவாளியாக சென்றேன். எனக்கு ரூ.400 சம்பளம் வழங்கப்பட்டது.
நான் கைது செய்யப்பட்ட பிறகு இந்திய அரசு எனது குடும்பத்துக்கு எந்த உதவியும் செய்யவில்லை. பாகிஸ்தானில் உள்ள இந்திய கைதிகளுக்காக அரசு எதுவும் செய்யவில்லை. பாகிஸ்தான் சிறையில் நான் அனுபவித்த துன்பங்கள் குறித்து நான் எதுவும் சொல்லப் போவதில்லை. அப்படி கூறினால், பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கைதிகள் பாதிக்கப்படுவார்கள் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து காஷ்மீர் சிங் விடுதலைக்காக பாடுபட்ட பாகிஸ்தான் மனித உரிமைத் துறை அமைச்சர் அன்சார் பர்னி அதிர்ச்சி வெளியிட்டார். சிங் உளவாளி என்று எனக்கு தெரியாது. காஷ்மீர் சிங்கின் விடுதலை தொடர்பாக பல விமர்சனங்களை நான் சந்தித்து வருகிறேன்.
34 ஆண்டுகள் ஒரு மனிதன் சிறையில் இருப்பதை பார்த்து மனிதாபிமான அடிப்படையில் அவரது விடுதலைக்காக பாடுபட்டேன். அவரது கருத்து, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கைதிகளின் விடுதலையை பாதித்துள்ளது. தான் ஒரு உளவாளி என்று அவராக சொன்னாரா, சொல்ல வைக்கப்பட்டாரா என்று தெரியவில்லை.
ஆனால், இது, பாகிஸ்தான் சிறையில் உள்ள இந்திய கைதிகளையும், இந்திய சிறையில் உள்ள பாகிஸ்தான் கைதிகளையும் பாதிக்கும் என்று கூறியிருந்தார்.
இந் நிலையில், தான் இந்திய உளவாளி இல்லை. நான் கூறிய பேட்டியை மீடியாக்கள் தவறாகப் போட்டு விட்டன என்று காஷ்மீர் சிங் விளக்கியுள்ளார். உளவாளி என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டேன் என்றுதான் நான் கூறியிருந்தேன். உளவாளி என்று கூறவில்லை என்று தெரிவித்துள்ளார் சிங்.












Click it and Unblock the Notifications