வருகிறது 'சூப்பர் ஸ்பீட்' இன்டர்நெட்!
பேஸ்நெட் நிறுவனம் இந்த அதி வேக இன்டர்நெட் சேவையை வழங்கவுள்ளது. இதற்காக கடலுக்கடியில் 10 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு அதி நவீன கேபிள்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த இன்டர்நேட் சேவையை வணிக நிறுவனங்கள், இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதுகுறித்து பேஸ்நெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி வில்லியம் பார்னி கூறுகையில், யுனிட்டி என்று இந்த புதிய கேபிள் முறைக்குப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் புதிய கேபிள் முறை மூலம் பிராட்பேண்ட் சேவையில் நிலவும் தடங்கல்கள், சிக்கல்களை களைய முடியும். மேலும் அதி வேக சேவையையும் தர முடியும்.
இதுதவிர அமெரிக்காவுக்கும், ஆசிய நாடுகளுக்கும் இடையிலான இன்டர்நெட் டிராபிக்கையும் வேகப்படுத்த முடியும், அதிகரிக்க முடியும்.
இந்தப் புதிய கேபிள் முறை மூலம் டிரான்ஸ்-பசிபிக் பிராந்தியத்தில் 20 சதவீதம் அளவுக்கு இன்டர்நெட் பயன்பாடு அதிகரிக்கும்.
கடலுக்கடியில் 10 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு இந்த கேபிள் போடப்படுகிறது. ஜப்பானின் டோக்யோ அருகில் உள்ள சிகுராவிலிருந்து அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலெஸ் மற்றும் பிற மேற்கு கடற்கரை பகுதிகள் வரை இதன் மூலம் இணைப்பு கொடுக்கப்படும்.
சிகுராவிலிருந்து பிற ஆசிய நாடுகளுக்கு இணைப்பு வழங்கப்படும்.
இந்தியாவின் பார்தி ஏர்டெல், தெற்காசியாவில் குளோபல் டிரான்சிட், ஜப்பானில் கேடிடிஐ, கூகுள், சிங் டெல், என்.இ.சி. கார்ப்பரேஷன், டைகோ கம்யூனிகேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள், யுனிட்டி திட்டத்தில் இணைந்துள்ளன. 2010ம் ஆண்டு யுனிட்டி திட்டம் அமலுக்கு வரும் என்றார் அவர்.
பார்தி ஏர்டெல் தவிர பி.எஸ்.என்.எல், ரிலையன்ஸ் ஆகியவையும் இந்தத் திட்டத்தின் கீழ் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்நெட் ஏற்கனவே சென்னை, பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லி, புனே ஆகிய நகரங்களில் தனது அலுவலகங்களைத் திறந்துள்ளது.
பேஸ்நெட்டின் யுனிட்டி மூலம், இந்தியாவில் பிராட்பேண்ட் சேவை மேலும் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இன்டர்நெட் வேகமும் கூடும்.