உளுந்தூர்பேட்டையில் இரு பிரிவு கிருஸ்துவர்கள் மோதல்-போலீஸ் சுட்டு 2 பேர் பலி

வன்முறையில் ஈடுபட்டவர்களைக் கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலியாயினர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள இறையூர் கிராமத்தில் இன்று இச் சம்பவம் நடந்தது.
இங்குள்ள கிருஸ்துவ தேவாலயத்தை பயன்படுத்துவதில் வன்னியர்கள் மற்றும் தலித்கள் இடையே நெடுங்காலமாக மோதல் நிலவி வருகிறது.
தலித் கிருஸ்துவர்கள் இந்த ஆலயத்துக்குள் வர சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதையடுத்து தலித்கள் தங்களுக்கென தனியாக ஒரு ஆலயத்தைக் கட்டி தனியாக பாதிரியாரையும் நியமித்தனர்.
இதையடுத்து இரு தரப்புக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது.
இந் நிலையில் இன்று காலை தலித் சமூகத்தைச் சேர்ந்த கிருஸ்துவர்களின் வீடுகளை வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சூறையாடினர். மேலும் அவர்களது தேவாலயத்தையும் அடித்து நொறுக்கினர்.
சம்பவம் குறித்து அறிந்தவுடன் போலீஸ் படை அங்கு விரைந்தது. ஆனால், போலீசாரையும் அவர்கள் தாக்கினர். இதையடுத்து கண்ணீ்ர் புகை குண்டுகளை வீசி போலீசார் கூட்டத்தைக் கலைக்க முயன்றனர்.
அதற்கும் அவர்கள் கட்டுப்படவில்லை. இதையடுத்து ரப்பர் புல்லட்களால் சுட்டும் பலன் ஏற்படவில்லை.
இதையடுத்து போலீசார் கூட்டத்தினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் வன்னிய சமூகத்தைச் சேர்ந்த பெரியநாயகன் (40) என்பவர் உள்பட இரு கிருஸ்துவர்கள் பலியினர். மேலும் 5 பேர் படுகாயமடைந்தனர்.
முன்னதாக கூட்டத்தினர் பாட்டில்களை வீசி நடத்திய தாக்குதலில் எஸ்பி அமல்ராஜ் உள்பட 5 போலீசாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
வன்னியர்களின் தேவாலயத்தை மூடப் போவதாக விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பைச் சேர்ந்த சிலர் புரளி கிளப்பிவிட்டதே இன்றைய வன்முறைக்குக் காரணம் என போலீசார் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications