கடை தேங்காயை வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் கருணாநிதி: ஜெ

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எனது ஆட்சி காலத்தில் மின்சாரப் பற்றாக்குறை என்பது எள்ளளவும் கிடையாது. தமிழ்நாடு மின்சார உற்பத்தில் உபரி மாநிலமாக இருந்தது.
ஆனால், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் தற்போதைய நிலைமை என்ன என்று கேட்டால், காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் இருப்பதாகவும், அதற்காக குடியரசுத் தலைவர் விருதை தமிழ்நாடு மின்சார வாரியம் பெற்று இருப்பதாகவும் கூறுகிறார் ஆற்காடு வீராசாமி.
கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பதைப் போல, எனது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட சாதனைகளுக்காகக் கிடைத்த விருதை, தான் செய்த சாதனை போல் சித்தரிக்கும் கருணாநிதி மற்றும் ஆற்காடு வீராசாமியின் செயல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
காற்றாலை உற்பத்தியில் தமிழகம் முன்னணியில் இருந்தால், மின் தடை, மின் வெட்டு ஆகியவை ஏன் ஏற்படுகின்றன? அண்டை மாநிலங்களில் இருந்து ஏன் மின்சாரத்தை வாங்குகிறார்கள்? மின்சார விடுமுறை அறிவிப்பு ஏன் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் வெளியிடப்படுகிறது?
தற்போது அனைத்து உயர் அழுத்த மற்றும் தாழ்வழுத்தத் தொழிற்சாலைகளுக்கு ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை மின்சார விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்நாளில் காலை 6 மணி முதல் 10 மணி வரை மின் வாரிய இணைப்பில் இருந்து மின்சாரத்தைப் பயன்படுத்தக் கூடாது என்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தால் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளது.
இது மட்டும் அல்லாமல், தினமும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மின் வாரியத்தின் மின் விநியோகத்தைப் பயன்படுத்தாமல், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்துமாறு அனைத்துத் தொழிற்சாலைகளும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.
வெகு விரைவில் வீட்டு உபயோகிப்பாளர்களுக்கும் இதே நிலைமை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது மட்டும் அல்லாமல், மத்திய அரசின் 2003ம் ஆண்டு மின் சட்டத்தின்படி, உற்பத்திப் பிரிவில் இருந்து விநியோக பிரிவுக்கு மின் சாரத்தை எடுத்து செல்லும் பிரிவை, தனி நிறுவனமாகப் பிரித்து அதற்கு ஸ்டேட் டிரான்ஸ்மிஷன் கார்ப்பரேஷன் என்று பெயர் வைக்கப் போவதாகவும்,
இதன் மூலம் மின்சார வாரியம் தனியார் வசம் செல்லும் அபாயம் உள்ளதாகவும், மின்சார வாரியத்தில் தற்போது பணிபுரியும் ஊழியர்கள் மேற்படி நிறுவனத்தின் கட்டுப்பாட்டிற்குள் வந்து விடுவார்கள் என்றும், தற்போது ஊழியர்கள் பெற்று வரும் சலுகைகள் தொடர்ந்து கிடைப்பது சந்தேகம் என்றும் தகவல்கள் வருகின்றன.
1996-2001ம் ஆண்டு கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதே, இது போன்ற ஒரு வாரியத்தை அமைக்க ஏற்கெனவே முடிவு செய்திருந்தார். அதை இப்போது நிறைவேற்ற முயற்சி செய்கிறார் போலும்!.
எனது ஆட்சி காலத்தில், தொழிலாளர் நலன் கருதி மேற்படி திட்டத்தை நான் நடைமுறைப்படுத்தவில்லை. தனியாருக்குத் தாரை வார்த்துக் கொடுக்கும் தி.மு.க. அரசின் செயலை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்த முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இத்தகைய திறனற்ற செயல்பாடுகளால், மின்துறை மட்டுமல்ல, அனைத்துத் துறைகளும் வெகு சீக்கிரம் பாதிக்கப்பட கூடிய நிலைமை உருவாகி வருகிறது.
தொழிற்சாலைகள் எல்லாம் ஜெனரேட்டர்' உபயோகித்துக் கொள்ளுங்கள் என்று அறிவித்தால், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க எவரும் முன்வர மாட்டார்கள்.
இருக்கின்ற தொழிற்சாலைகளும், மின்சாரம் மிகையாக உள்ள மாநிலங்களுக்குச் சென்று விடும்.
மின்சாரத் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமியோ வட மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கப் போகிறோம், வட கிழக்கு மாநிலங்களில் இருந்து மின்சாரத்தை வாங்கப் போகிறோம், எனவே மின்சாரப் பற்றாக் குறை ஏற்படாது', என்று பத்திரிகைகளுக்குப் பேட்டி அளிக்கிறார்.
தமிழ்நாடு மின்சார வாரியம் சொல்வது உண்மையா அல்லது ஆற்காடு வீராசாமி சொல்வது உண்மையா. தமிழ் நாடு மின்சார வாரியத்தில் என்ன நடக்கிறது என்பதை கருணாநிதி நாட்டு மக்களுக்கு விளக்கக் கடமைப்பட்டிருக்கிறார்.
தொழிற்சாலைகளுக்கு மின்சார விடுமுறை அறிவித்த தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய ஆட்சியாளர்கள் மீது பழி போடுவது ஆகியவற்றில் நேரத்தை வீணடிப்பதைத் தவிர்த்து, மின் உற்பத்தியைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதில் கருணாநிதி கவனம் செலுத்தி, மின்சார விடுமுறை அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
தமிழ்நாடு மின்சார வாரி யத்தைத் தனியாரிடம் தாரை வார்க்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும். இல்லையெனில், மக்களைத் திரட்டி அ.தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அரசுக்கு எச்சரிக்கை செய்ய விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications