ப.சி தொகுதியில் எஸ்பிஐ 10,000வது கிளை
காரைக்குடி: விவசாயிகளின் ரூ. 60,000 கோடி கடனை ரத்து செய்ததை எப்படி சமாளிக்கப் போகிறோம் என்று கேட்கும் எதிர்க்கட்சியினருக்கு நாடாளுமன்றத்தில் அரசு விளக்கமாக பதில் அளிக்கும் என்று மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.
சிதம்பரத்தின் தொகுதியான சிவகங்கை மாவட்டத்தில் புதுவயல் கிராமத்தில், பாரத ஸ்டேட் வங்கியின் பத்தாயிரமாவது கிளை நேற்று தொடங்கப்பட்டது. இதை ப.சிதம்பரம் திறந்து வைத்தார்.முன்னதாக குன்றக்குடியில் பாங்க் ஆப் இந்தியாவின் கிளை திறக்கப்பட்டது.
குன்றக்குடி விழாவில் ப.சிதம்பரம் பேசுகையில், கடனை தள்ளுபடி செய்வது, வட்டியை தள்ளுபடி செய்வது என்பதெல்லாம் நடக்காத காரியமல்ல. நடந்த காரியம்தான். நடக்கக் கூடிய காரியம்தான்.
இப்போது 4 கோடி விவசாயிகளுக்கு ரூ.60 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி என்றவுடன் சிறிது பிரமிப்பு ஏற்படுகிறது. சிலர் மலைத்து விட்டனர்.
தள்ளுபடி செய்ய வேண்டும் என்று சொன்னவர்கள், நான் தள்ளுபடி செய்ய மாட்டேன் என்று நம்பி சொன்னவர்கள், விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்பட்டவுடன் வாயடைத்து நிற்கின்றனர்.
சோனியாகாந்தி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோரது முழு ஆதரவுடன் மத்திய அரசு இந்திய நாட்டின் விவசாயிகளின் நிலையை அறிந்து, இந்த கடன் தள்ளுபடி மிகவும் அவசியம் என உணர்ந்து சிறு, குறு விவசாயிகளுக்கு கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறோம் என்றால் விவசாயிகளிடம் இந்த நாடு பட்ட கடனை நாங்கள் அடைக்கிறோம்.
நாட்டு மக்களுக்கு தேவையான பயிர்களை உற்பத்தி செய்யக் கூடிய இந்திய விவசாயிகளுக்கு, 60 ஆண்டு கால சுதந்திர இந்தியாவில் நாள்தோறும் வியர்வை சிந்தி உழைக்கும் விவசாயிகளுக்கு இந்திய நாட்டு மக்கள் பட்ட கடனை அடைக்கும் முகமாக இந்த கடனை தள்ளுபடி செய்துள்ளோம். இதனை மகிழ்ச்சி யோடு செய்திருக்கிறோம்.
நாணயமாக நடந்து கொண்டு நம் நாட்டு விவசாயிகள் இயற்கை காரணங்களால் விளைச்சலின்றி கடனை அடைக்க முடியாமல், கடனின் சுமை அதிகரிக்கும்போது அல்லல்படுகின்றனர். அரசு தரும் குறைந்த வட்டியில் கடன் பெற்றும் விவசாயத்தில் சில நேரங்களில் பாதிக்கப்படுகின்றனர். வங்கியில் கடன் பெறாமல் லோவாதேவி, கந்து வட்டிகாரர்களிடம் கடன் பெற்றால் மீளமுடியாத துயர் நிலையை விவசாயி அடைய நேரிடும்.
எனவே, விவசாயிகளை பாதுகாக்க அரசு பழைய கடன்களை ரத்து செய்கிறது. அதன் பின்னர், வங்கியில் புதிய கடன் பெற்று, புதிய விவசாயம் செய்து சுமையில்லாமல் இந்திய விவசாயிகள் தங்களது கடமையைச் செய்ய வேண்டும் என்பதற்காக இந்த நாடுபட்ட கடனை அடைக்கும் முகமாக ரூ.60 ஆயிரம் கோடி கடனை ரத்து செய்திருக்கிறோம்.
இதற்கு எங்கேயிருந்து பணம் வரும் என எதிர்க்கட்சியினர் கேட்கிறார்கள். கடனை ரத்து செய் என இவர்கள் கூறும் போது இந்த கேள்வி அவர்கள் மனதில் எழவில்லை.
இப்போது விவசாயக் கடனை ரத்து செய்த பிறகு பணம் எங்கிருந்து வரும், எப்படி சமாளிப்பீர்கள் என்கின்றனர். எங்கிருந்து பணம் வரும் என்பதை நாடாளுமன்றத்தில் அரசு விளக்கும்.
இந்த திட்டத்திற்கு பணத்தை எப்படி பெறுவது என்பது அரசுக்கும், பிரதமருக்கும், எனக்கும் தெரியும். 60 ஆயிரம் கோடி ரூபாய்க்கு எப்படி நாங்கள் வழி செய்யப்போகிறோம் என்பதை நாடாளுமன்றத்தில் தெரிவிக்கிறோம் என்றார் ப.சிதம்பரம்.