குழந்தையை மாற்றி வைத்த இந்திய நர்ஸ் டிஸ்மிஸ்

செளதி அரேபியா, நஜ்ரன் என்ற பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் இந்தியாவைச் சேர்ந்த பெண் நர்சாக வேலை பார்த்து வந்தார்.
4 ஆண்டுகளுக்கு முன் துருக்கி மற்றும் செளதியைச் சேர்ந்த பெண்கள் பிரசவத்துக்காக அந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளை நர்ஸ் தவறுதலாக மாற்றி வைத்துவிட்டார்.
குழந்தைகளை பார்க்க வந்த அந்த பெண்களின் கணவர்கள் குழந்தைகள் வித்தியாசமாக இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். துருக்கியைச் சேர்ந்த பெண்ணின் கணவர், தன்னுடைய குழந்தை பிரவுன் நிறத்தில் இருப்பதால் மனைவியின் நடத்தையில் தனக்கு சந்தேகம் இருப்பதாகவும், மனைவியை கொல்லப் போவதாகவும் மிரட்டினார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். இதையடுத்து இது குறித்து விசாரிக்க கமிட்டி அமைக்கப்பட்டது.
குழந்தையை டிஎன்ஏ பரிசோதனை செய்துப் பார்த்தபோது குழந்தைகள் மாறிப் போனது தெரிய வந்தது. இதையடுத்து 2 தம்பதிகளுக்கும் மருத்துவமனை 6 மில்லியன் ரூபாய் நஷ்டஈடு வழங்கியது.
இந்த இரு குழந்தைகளின் பெற்றோர்களும் இப்போது அருகருகே ஒரு வீடுகள் எடுத்து தங்கியுள்ளனர். குழந்தைகளை மாற்றிக் கொள்ள வசதியாக ஒருவரோடு ஒருவர் பழகவும், குழந்தையுடன் பழகவும் அவர்கள் அருகருகே வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் 4 ஆண்டுகளுக்குப் பின் இப்போது இந்திய நர்சை மருத்துவமனை நிர்வாகம் வேலையை வி்ட்டு நீக்கியுள்ளது. மேலும் தொடர்ந்து பணியாற்ற அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
இதனால் அந்த நர்ஸ் இந்தியா திரும்பும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதே பிரச்னை தொடர்பாக எகிப்தைச் சேர்ந்த ஒரு டாக்டரும், பிலிப்பைன்ஸைச் சேர்ந்த ஒரு நர்சும் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், செளதியை சேர்ந்த இன்னொரு நர்ஸ் வெறும் அபராதத்துடன் விடப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications