இலங்கை ராணுவ தளபதிக்கு வரவேற்பா-இந்தியாவுக்கு புலிகள் கண்டனம்
இது குறித்து வன்னியில் இருந்து புலிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமைதிப் பேச்சுவார்த்தையில் இருந்து ஒருதலைப் பட்சமாக விலகி, தமிழர்கள் மீது பயங்கரமான வன்முறைத் தாக்குதலை நடத்தி வரும் இலங்கையின் ராணுவ தளபதிக்கு ராணுவ மரியாதை அளித்த இந்தியாவின் செயல் கண்டனத்துக்குரியது என புலிகள் கூறியுள்ளனர்.
நீண்ட காலத்துக்குப் பின் இந்தியாவுக்கு புலிகள் நேரடியாக கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
மட்டக்களப்பில் கருணா கட்சி வெற்றி:
இதற்கிடையே இலங்கையின் மட்டக்களப்பில் நடந்த தேர்தலில் விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவின் குழுவைச் சேர்ந்த 11 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இலங்கையின் கிழக்கில் உள்ள மட்டக்களப்பு தமிழர்கள் நிறைந்த மாவட்டம். இந்தப் பகுதியை சில மாதங்களுக்கு முன்பு புலிகளின் பிடியிலிருந்து முழுமையாக மீட்டது இலங்கை.
இதையடுத்து நேற்று ஒரு நகராட்சி மற்றும் சில உள்ளாட்சி அமைப்புகளுக்கு நேற்று அங்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலை முக்கிய தமிழர் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசிய கட்சி (ரனில் கட்சி) ஆகியவை புறக்கணித்து விட்டன.
இந்த நிலையில் அங்கு தேர்தல் நடந்தது. இந்த மாவட்டத்தில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலில் விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்ட கருணாவின் கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிட்டது.
மொத்தம் 53 சதவீத வாக்குகள் பதிவாகின. அதில் 19 இடங்களில் போட்டியிட்ட கருணா குழுவினருக்கு 11 இடங்கள் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டது.
கருணா இப்போது திருட்டு பாஸ்போர்ட் வழக்கில் சிக்கி லண்டன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது நினைவிருக்கலாம்.