பால் விலை உயர்வுக்கு ஜெ. கடும் கண்டனம்
சென்னை: ஆவின் பால் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 என தமிழக அரசு உயர்த்தியுள்ளது. ஆனால் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு விலை வைத்து பால் விற்கப்படுவதால் மக்கள் பெரும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் பால் விலை உயர்வுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்புக்கு வந்து, கடந்த 21 மாதங்களில் இது 2வது விலை உயர்வாகும். இதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வகுப்பு மக்கள் பெரும் பாதிப்படைவார்கள். எனவே இந்த விலை உயர்வை அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
பால் விலை உயர்வு காரணமா, டீ, காபி, ஐஸ்க்ரீம் போன்ற பால் சார்ந்த பொருட்களின் விலையும் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அனைத்து வகுப்பு மக்களின் குடும்ப பட்ஜெட்டிலும் ரூ. 500 அளவுக்கு துண்டு விழும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் பால் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 25 பைசா உயர்த்தியது திமுக அரசு. ஆவின் நிறுவனம் ஆண்டுக்கு ரூ. 20 கோடி அளவுக்கு நஷ்டத்தை சந்திப்பதாக கூறி இந்த விலை உயர்வை அரசு அறிவித்தது.
இந்த நிலையில் இந்த ஆண்டு மார்ச் மாதம் 2 ரூபாய் விலை உயர்வை அறிவித்துள்ளது. மேலும் சத்தம் போடாமல், ஆவினின் பிற பொருட்களின் விலையையும் உயர்த்தியுள்ளது.
எனது ஆட்சிக்காலத்தின்போது பால் கொள்முதல் விலையை மட்டுமே உயர்த்த உத்தரவிட்டேன். விற்பனை விலையை நான் உயர்த்தியதே இல்லை.
எனவே மக்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு எனது அரசு கடைப்பிடித்த வழிமுறைகளை திமுக அரசும் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications