கத்தி வைத்துக் கொள்ளுங்கள்-இ.கம்யூ தொண்டர்களுக்கு தா.பாண்டியன் அறிவுரை

திருவாரூர் மாங்குடி ஊராட்சி மன்றத் தலைவராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஜெயக்குமார் பட்டப்பகலில் நடுரோட்டில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதைக் கண்டித்து திருவாரூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன்,
தி.மு.ககாரர்களே கொலைக் குற்றம் சாட்டப்பட்டவர்களாக இருந்தாலும், இக்கூட்டத்திற்கு தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் வந்துள்ளனர்.
போலீசுக்கு தகவல் கொடுத்தும் கொலையை தடுக்க முடியவில்லை. இதனால் போலீசை நம்ப மக்கள் தயாராக இல்லை.
மத்திய, மாநில அரசுகள் கம்யூனிஸ்டுகளின் தயவில் இருக்கும் போதே இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தலைமைக்குழு கூடி நம்மை நாமே காப்பாற்றிக் கொள்ள நடவடிக்கை எடுக்க உள்ளோம்.
எங்களுக்கு காக்கியை கண்டாலே அலர்ஜியாக உள்ளது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த நிறத்தையே மாற்றி விடுவோம்.
டெல்லியில் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தை பாஜகவினர் தாக்கியுள்ளனர். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் படுகொலை, ஜெயக்குமார் படுகொலை என தொடர்ந்தால், இதற்கு யார் தான் முடிவு கட்டுவது.
கம்யூனிஸ்ட்கள் இனி ஒரு துளி ரத்தம் சிந்தினாலும் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். முதல்வரிடமோ, டிஜிபியிடமோ போயெல்லாம் முறையிட்டுக் கொண்டிருக்க மாட்டோம்.
ஒவ்வொரு தொண்டனும் கத்தி வைத்துக் கொள்ளலாம். 3 அடி நீள தடி வைத்துக் கொள்ளலாம். அடியை தாங்கிக் கொள்வதற்கு பதிலாக இனி திருப்பித் தாக்குங்கள்.
ஜெயக்குமார் குடும்பத்திற்கு சிறிய கீறல் ஏற்பட்டாலும் தமிழகமே பற்றி எரியும். போலீஸ் துறை சீர்படுத்தப்பட வேண்டும். அறந்தாங்கியில் கம்யூனிஸ்ட் கட்சி மேடையில் ஏறி தாக்க முற்படுகிறார்கள். இதையெல்லாம் பார்த்து கொண்டிருக்க முடியாது.
மேலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் உயிரை பாதுகாக்க தற்பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்படும். மிக விரைவில் இந்த பயிற்சி வகுப்புகள் துவங்கும். அதன் செயல் விளக்கம் பொது மக்கள் மத்தியில் செய்து காண்பிக்கப்படும்.
இன்னும் இரு தினங்களில் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளோம். அப்போது தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை, கலவர சம்பவங்கங்களின் பட்டியலை அவரிடம் கொடுக்க உள்ளோம்.
தமிழகத்தில் சுமார் 1,500 முக்கிய சமூக விரோதிகள் உள்ளதாக அரசு தரப்பில் கணக்கிடப்பட்டுள்ளது. உண்மையைச் சொன்னால் இந்த எண்ணிக்கையில் 1,000 க்கும் மேற்பட்டோர் அரசியல்வாதிகளாக உள்ளனர்.
இது போன்ற நபர்களை அரசியல் கட்சிகள் தயவு சாட்சன்யம் இன்றி நீக்க முன் வரவேண்டும் என்றார் தா.பாண்டியன் ஆவேசமாய்.
இக் கூட்டத்தில் சிபிஐ எம்.எல்.ஏ.க்கள் சிவபுண்ணியம், பத்மாவதி, உலகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மிகவும் கோபமான அரசியல்வாதி என்றாலும் கூட வழக்கமாக மிக நிதானமாகப் பேசக் கூடியவர் பாண்டியன். பொது வாழ்வில் நேர்மைக்கும் நியாயத்துக்கும் பேர் போனவர்.
யார் என்று பார்க்காமல் மனதில் பட்டதை சொல்லிவிடுவார். யாருக்கும் அஞ்சாத கம்யூனிஸ்ட் இவர்.
போலீசார் ஒழுங்காக செயல்பட்டிருந்தால் இந்தக் கொலையை தவிர்த்திருக்கலாம் என்ற கோபத்தில் பாண்டியன் இவ்வாறு பேசியதாக அக் கட்சியின் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications