வேலை..ரூ.35 லட்சம் மோசடி- பெண்ணுக்கு வலை
மதுரை: மதுரை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடமும் ரூ.35 லட்சம் மோசடி செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த பத்மா என்பவர் மதுரை மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏராளமானவர்களிடம் பணம் வாங்கினார்.
நீண்ட நாட்களாகியும், வேலை வாங்கித் தராததால் சந்தேகமடைந்த பணம் கொடுத்தவர்கள், பத்மாவிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பத்மா பணத்தை திரும்ப கேட்டால் கூலிப் படையை வைத்து கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் திருவில்லிபுத்தூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
இதைத் தொடர்ந்து பத்மா, அவரது உறவினர்கள் ராமர், லட்சுமணன், லட்சுமி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து இவர்கள் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மொத்தம ரூ. 35 லட்சம் அளவுக்கு பத்மா மோசடி செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.