ராஜ்யசபா விவகாரம்: காங்-அன்புமணி பேச்சு; இன்றிரவு முடிவு அறிவிப்பு
ராஜ்யசபா தேர்தலில் திமுகவிடம் ஒரு சீட் கேட்டு மார்ச் 15ம் தேதி வரை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவகாசம் கொடுத்தார். ஆனால் அதை திமுக நிராகரித்து விட்டது. மேலும் திமுக சார்பில் போட்டியிடும் இரு வேட்பாளர்களின் பெயர்களையும் அறிவித்தது.
இதையடுத்து பாமக நிர்வாகக் குழுக் கூட்டம் இன்றிரவு கூட்டப்பட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை ராமதாஸ் நிருபர்களை சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. அவர் ஏதாவது முக்கிய முடிவை அறிவிக்கக் கூடும் என்ற எதிர்பார்ப்பில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர்.
ஆனால், செய்தியாளர்களை சந்தித்த ராமதாஸ் 2008-09ம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கைக்கு உதவியாக பாமக சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நிழல் பட்ஜெட்டை வெளியிட்டார். மேலும் வேளாண்துறைக்கான தனியாக ஒரு பட்ஜெட்டையும் வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
ஆண்டுதோறும் பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கைகள் வெளியிட்டு வருகிறோம். அரசின் திட்டமிடலுக்கு இது உதவும் என்ற நோக்கில் இதை வெளியிட்டு வருகிறோம். இந்த ஆண்டு வேளாண் துறைக்கென தனியான நிழல் நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளோம். இதன் பிரதியை முதல்வருக்கு அனுப்பியுள்ளோம்.
சோனியா செயலாளருடன் பேச்சு:
ராஜ்யசபா தேர்தல் தொடர்பாக சோனியா காந்தியின் தூதர் அகமது படேலுடன், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தத் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி இன்று மீண்டும் நிர்வாகக் குழுவை கூட்டி முடிவு செய்ய இருக்கிறோம். இன்று இரவு அந்த கூட்டம் நடைபெறும். அதன் பிறகு நாங்கள் முடிவை அறிவிப்போம்.
திமுக கூட்டணியில் பா.ம.க. நிலை என்ன என்பது பற்றி 15ம் தேதிக்கு பிறகு தெரியும் என்று கூறியிருந்தேன். எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கெடுவை விதித்தேன்.
இப்போது அரசியல் சூழ்நிலை மாறிவருகிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டை சேர்ந்தவர்கள் எங்களிடம் ஆதரவை கேட்டார்கள்.
இதற்கிடையே சோனியாவின் அரசியல் செயலாளர் அகமத் படேல் அமைச்சர் அன்புமணியை நான்கு முறை சந்தித்து பேசி இருக்கிறார். அதுபற்றியும் நிர்வாகக் குழு கூட்டத்தில் ஆலோசிப்போம்.அதன் பிறகு எங்கள் ஆதரவு யாருக்கு என்ற முடிவை அறிவிப்போம்.
15ம் தேதிக்குள் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதியதால் அதுவரை காத்திருப்பதாக கூறினோம். அரசியல் வெளிப்பாடு மற்றும் முன்னேற்றமான சூழ்நிலை காரணமாக இன்று முடிவு செய்கிறோம்.
ஆட்சியாளர்கள் இலவச திட்டங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விட்டு விட்டு, வேலை வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் தற்போது சட்டம்-ஒழுங்கு முன்பைவிட மோசமாக உள்ளது. குற்றச்சாட்டுகளை தடுக்க அரசு நிரந்தர தீர்வுகாண வேண்டும்.
விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் போலீசார் தடியடி நடத்தி எச்சரிக்காமல் நேரடியாக துப்பாக்கி சூடு நடத்தியிருக்கிறார்கள். இது அநியாயம் என்றார் ராமதாஸ்.