ஊட்டி: வறட்சியால் முதுமலை சரணாலயம் மூடல்
ஊட்டி: வறட்சி காரணமாக முதுமலை வன சரணாலயம் வரும் மே மாதம் 31ம் தேதி வரை மூடப்படுகிறது.
இதனால் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என சரணாலய காப்பாளர் அறிவித்துள்ளார்.
நீலகிரியில் உள்ள முதுமலை சரணாலயத்தில் யானைகள் முகாம் உள்ளது. அரிய வகை விலங்குகளும் உள்ளன. இந்த சரணாலயத்தைக் காண ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
சுற்றுலாப் பயணிகளை கவர யானை சவாரியும் வாகன சவாரியும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்படுகிறது. கோடைக் காலம் துவங்கியுள்ளதால், வனத்தில் பசுமை குறைந்து வறட்சி அதிகரித்து வருகிறது. போதிய உணவு இல்லாமல் விலங்குகள் இடம் பெயர்கின்றன.
இந்நிலையில் சரணாலயம் மூடப்படுகிறது.
இது குறித்து முதுமலை சரணாலய காப்பாளர் ராகேஷ்குமார் டோக்ரா வெளியிட்ட அறிக்கையில்,
முதுமலை வன உயிரின தேசிய பூங்கா பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையும் வறட்சியும் நிலவி வருவதால், தாவரங்கள் காய்ந்துள்ளன.
தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் இன்று (12 ம் தேதி) முதல் மே மாதம் 31ம் தேதி வரை, அல்லது மறு உத்தரவு வரும் வரை, முதுமலை தேசிய பூங்கா தற்காலிமாக மூடப்படுகிறது என்று கூறியுள்ளார்.
கடும் வறட்சி நிலவும்போது சரணாலயம் மூடப்படுவது வாடிக்கையே என்பது குறிப்பிடத்தக்கது.