நான் கேட்பது காபிக்கு சர்க்கரை அல்ல, கூழுக்கு உப்பு-விஜய்காந்த்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பால் விலையை உயர்த்தாமலேயே ஆவின் நிறுவனத்துக்கு ஏற்படும் இழப்பை அரசு ஈடு செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பால் விலை உயர்த்தப்பட்டதற்கான காரணங்களை முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். பாலை உற்பத்தி செய்பவர்கள் செலவு கூடுகிறது என்று சொன்னதால் பால் விலை உயர்த்தப்பட்டது என்றும், இதைக் குறை சொன்னால் ஓட்டு கிடைக்காது என்றும் அவர் சொல்கிறார்.
உண்மையில் பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றியதை நான் குறை கூறவில்லை.

பால் உற்பத்தியாளர்களின் விலையைக் கூட்டுவதனாலேயே, பால் வாங்குவோருக்கு விலையைக் கூட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நிர்வாகச் செலவைக் குறைக்கலாம். அப்படியும் ஆவின் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டால் அரசு அதை ஈடு செய்யலாம்.

எத்தனையோ பொருட்கள் உற்பத்தி விலைக்கேற்ப லாபத்துடன் வெளிச் சந்தையில் விற்கப்படுகின்றன. அவற்றில் அரசு தலையிடுவதில்லை. ஆனால் பால் விநியோகத்தில் அரசு தலையிடுவது விலை ஏறாமல் பார்த்துக் கொள்வதற்கு தான்.

இந்த கொள்கைக்கு நேர்மாறாக, அரசே ஒரு லிட்டர் பாலுக்கு இரண்டு ரூபாய் விலையைக் கூட்டி விற்கலாமா என்பதே என் கேள்வி. ஒரு மாதத்திற்கு 30 லிட்டருக்கு கூடுதலாக ரூ.60 செலவாகும்.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த தாய்மார்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பால் வாங்க இந்த கூடுதல் செலவுக்கு எங்கே போவார்கள்?

உற்பத்தியாளர்கள் விலையைக் கூட்டும்பொழுது வாங்குபவர்களும் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டும் என்றால் அரசு தலையிடுவதில் அர்த்தமில்லாமல் போய்விடும்.

உதாரணத்திற்கு நெல் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை ஆயிரம் ரூபாய் தர வேண்டும் என்கிற நியாயத்தை முதல்வர் ஏற்றுக் கொள்கிறார். ஆனால், மலிவு விலையில் ஒரு கிலோ அரிசி இரண்டு ரூபாய் என்று ரேஷனில் தரப்படுகிறது.
இது ஏழை மக்களுக்கான நலத் திட்டமா? அல்லது ஓட்டு வாங்கும் சூழ்ச்சியா?

மாட்டுத் தீவனம் போன்ற பொருட்களின் விலையேற்றத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தான் காரணம். அதற்கு பால் உற்பத்தியாளர்கள் மீது பழி போடுவதில் நியாயமில்லை.

அனைத்து தரப்பு மக்களும் அன்றாடம் பயன்படுத்துவது பால் என்பதால் அதன் விலையை அதிகப்படுத்தியிருப்பது, ஏழை எளிய, நடுத்தர குடும்பங்களை வெகுவாகப் பாதிக்கும்.

இதை நான் அடித்துச் சொல்லவில்லை; ஏழைகளின் வறுமையை அறிந்து சொல்கிறேன்.
இடித்துச் சொல்லவில்லை; ஏழை மக்களின் இயலாமையைச் சொல்கிறேன்.

பால் விலை உயர்வு சம்பந்தமான குழப்பத்தை அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

நான் கேட்பது காபிக்கு சர்க்கரை அல்ல, கூழுக்கு உப்பு தான், ஏழைக் குழந்தைகளுக்கு பால் தான்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+