அரிசி கடத்தினால் 7 ஆண்டு ஜெயில்
சென்னை: ரேசன் அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் கடுமையான தண்டனை கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தக் கடத்தலை தடுப்பது தொடபான ஆய்வுக் கூட்டம் உணவுத்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமையி்ல் கோவையில் நடந்தது.
அதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
தமிழக எல்லைப் பகுதிகளில் 24 மணி நேர ரோந்து பணி மேற்கொள்வது, அரிசி கடத்தலுக்கு பயன்படுத்தும் லாரியின் உரிமத்தை ரத்து செய்யவும், டிரைவரின் லைசென்ஸை ரத்து செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
அதே போல கோவை, கன்னியாகுமரி, தேனி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, வேலூர் மாவட்டங்களில் விடுமுறை நாட்களிலும் இரவு நேர ரோந்து பணியே மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் கடத்தல்காரர்களுக்கு 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வாங்கித் தர குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக் கூட்டத்தில் உத்தரவிடப்பட்டது.
ரயில், பஸ்களில் அரிசி கடத்துபவர்கள், உதவும் அரசு அலுவலர்கள், ரேஷன் கடை ஊழியர்கள் ஆகியோர் மீதும் துறைரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரிசி கடத்தல்காரர்கள், போலி ரேஷன் கார்டுகள் குறித்து 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறைக்கு பொதுமக்கள் புகார் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொலைபேசி எண்கள்: 044-24338974, 25670204