டாக்டர் ஹனீப்பை விசாரிக்க ஆஸி. நீதிபதி வருகை
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் தீவிரவாதத் தொடர்பு தொடர்பாக கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்ட பெங்களூர் டாக்டர் முகம்மது ஹனீப்பிடம் விசாரணை நடத்த அந்நாட்டு நீதிபதி வரவுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த டாக்டர் ஹனீப், இங்கிலாந்து தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார். ஆனால் விசாரணையில், அவர் மீது எந்தக் குற்றமும் இல்லை என்று தெரிய வந்தது. இதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.
ஆனால் அப்போதைய குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸின் பிடிவாதம் காரணமாக ஹனீப் கிட்டத்தட்ட 12 நாட்கள் சிறையில் இருக்க நேரிட்டது.
ஹனீப் குற்றம் செய்தார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லாத நிலையில் அவரை சிறையில் அடைத்து மன உளைச்சலை ஏற்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் ஹனீப் விவகாரம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஒருவரை ஆஸ்திரேலிய அரசு நியமித்துள்ளது.
இந்த விசாரணைக் கமிஷன், முன்னாள் குடியேற்றத் துறை அமைச்சர் கெவின் ஆண்ட்ரூஸ், காவல்துறை தலைவர் மைக் கீட்லி ஆகியோரை விசாரிக்கவுள்ளது. முன்னாள் நியூ சவுத்வேல்ஸ் உச்சநீதிமன்ற நீதிபதி ஜான் கிளார்க் இந்த விசாரணை நடத்தவுள்ளார்.
மேலும் ஹனீப்பிடம் விசாரணை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஹனீப்பை ஆஸ்திரேலியாவுக்கு வருமாறு அழைப்பு விடப்படவுள்ளது. ஒருவேளை அவர் வர இயலாவிட்டால், நீதிபதி கிளார்க் பெங்களூர் வந்து விசாரிக்கத் திட்டமிட்டுள்ளார்.