பெண்களுக்கு 25% தள்ளுபடி-பிஎஸ்என்எல் புதிய சலுகை
பெங்களூர்: பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சாதாரண தொலைபேசிக்கு இந்த மாதம் பதிவு செய்பவர்களுக்கு முன்பணம் மற்றும் சேவைக் கட்டணம் இல்லை. பெண்கள் பதிவு செய்தால் மகளிர் தின பரிசாக ஆண்டு முழுவதும் 25 சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது.
இதுகுறித்து பி.எஸ்.என்.எல். நிறுவன முதன்மை பொது மேலாளர் சுபேந்து கோஷ் பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நாட்டின் தொலைதொடர்புத் துறையில் ஒருசமயத்தில் ஏகபோக உரிமையை பெற்றிருந்தோம். இந்தத் துறையில் தனியாரை அனுமதித்த பின்பு இப்போது 25 சதவீத வாடிக்கையாளர்கள் பங்குதான் உள்ளது.
இழந்த வாடிக்கையாளர்களை மீண்டும் பெறுவதற்கும், பி.எஸ்.என்.எல். இணைப்புகளை சரண்டர் செய்வதைத் தடுப்பதற்காகவும் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு வருடத்துக்கு மொத்தமாக கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 2 மாதம் கட்டண சலுகை அளிக்கப்படும்.
நடப்பு மார்ச் மாதத்தில் புதிய தொலைபேசி இணைப்புக்குப் பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முன்பணம் மற்றும் சேவைக்கட்டணம் இல்லை.
உடனடியாக அகண்ட அலைவரிசை கோரி பதிவு செய்தால் அவர்களுக்கு இணைப்புக் கட்டணம் இல்லை. ரூ.125 கட்டணத்தில் 2 எம்.பி.பி.எஸ். அகண்ட அலைவரிசை திட்டம் வழங்கப்படும். 150 எம்.பி. வரை இலவசமாக டவுண்லோடு செய்து கொள்ளலாம். அதன்பிறகு ஒரு எம்.பி.க்கு தலா 80 பைசா கணக்கிடப்படும்.
உலக மகளிர் தின சிறப்புப் பரிசாக இந்த மாதம் முழுவதும் தொலைபேசி இணைப்பு பெறும் பெண்களுக்கு வருடம் முழுவதும் கட்டணத்தில் 25 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.
செல்போன்களில் பிரீபெய்டு கார்டுகளுக்கு டாக்-டைம் ரூ.100 ஆக உயர்த்தப்படும். கார்டு வேலிடிட்டி 7 நாட்களில் இருந்து 30 நாட்களாக அதிகரிக்கப்படும். மேலும், ரூ.249 கட்டணத்தில் ஒரு வருடம் பேசும் வசதியுடன் கார்டுகள் வழங்கப்படவுள்ளன.
ரூ.1458 பணம் கட்டி பி.எஸ்.என்.எல். மொபைல் வாங்குபவர்களுக்கு பண்பலைவரிசையுடன்கூடிய தொலைபேசி வழங்கப்படும். 15 மாதங்களுக்கு தலா ரூ.100 கட்டண சலுகையும் உண்டு.
பொது தொலைபேசி நடத்துபவர்கள் ஒரு தவணைக்கு ரூ.250 வீதம் கட்டணத்தை 4 தவணைகளில் கட்டலாம்
வாடிக்கையாளர்கள் 94480 77777 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். செய்து அகண்ட அலைவரிசை மற்றும் புதிய தொலைபேசி இணைப்புகளுக்குப் பதிவு செய்து கொள்ளலாம் என்றார்.












Click it and Unblock the Notifications