மேலும் ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி இடமாற்றம்
டெல்லி: இரண்டு நாட்களுக்குள் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2வது நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனால் உயர்நீதிமன்ற வட்டாரத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று முன்தினம்தான் நீதிபதி அசோக்குமார், ஆந்திர உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். மார்ச் 25ம் தேதிக்குள் புதிய பொறுப்பை ஏற்க வேண்டும் என அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்று மாலை நீதிபதி சிங்காரவேலுவும் இடமாற்றம் செய்யப்பட்டார். இதுதொடர்பான உத்தரவினை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனிடம் பெற்று குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் பிறப்பித்துள்ளார்.
ஒரிசா உயர்நீதிமன்றத்திற்கு சிங்காரவேலு இடமாற்றம் செயய்ப்பட்டுள்ளார். இவருக்கு மார்ச் 26ம் தேதி வரை அவகாசம் தரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி அசோக்குமாரை நிரந்தர நீதிபதியாக உறுதி செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில் பதில் மனு தாக்கல் செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஏப்ரல் 10ம் தேதிக்குள் பதில் மனுவைத் தாக்கல் செய்ய அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அசோக்குமார் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்தப் பொறுப்பில் 2 ஆண்டுகள் வரை மட்டுமே இருக்க முடியும். ஆனால் அசோக்குமாருக்கு அதையும் தாண்டி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 2007ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது பணி நிரந்தரம் செய்யப்பட்டது.
இதை எதிர்த்து முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சாந்திபூஷன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டவர்களையோ அல்லது புரபேஷனில் நியமிக்கப்பட்டவர்களையோ நிரந்தரமாக்குவதற்கு முன்பு அதற்குரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ஆனால் அசோக்குமார் விஷயத்தில் இது மீறப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
அதேபோல நீதிபதி சிங்கராவேலுவும் 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2005ம் ஆண்டு ஏப்ரலில் அவருக்கு நான்கு மாத கால பணி நீட்டிப்பு கொடுக்கப்பட்டது. பின்னர் 2005 ஜூலையில் அவர் நிரந்தரம் செய்யப்பட்டார்.
இந்த இரு நீதிபதிகளும் அடுத்தடுத்து இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது உயர்நீதிமன்ற வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சாந்தி பூஷன் வழக்கு காரணமாக இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டார்களா என்பது தெரியவில்லை.
இருப்பினும், உச்சநீதிமன்ற தலைம நீதிபதி எடுத்து நடவடிக்கை இது என்று மட்டும் மத்திய சட்டத்துறை தரப்பில் கூறப்படுகிறது. இதற்கு மேல் இதை விவரிக்க முடியாது என்றும் சட்டத்துறை தரப்பில் கூறப்படுகிறது.