For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டத்தோ சாமிவேலு கட்சிக்கு கேபினட் அமைச்சர் பதவி இல்லை?

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசிய அமைச்சரவையில் தமிழர்களுக்கு இந்தமுறை கேபினட் அமைச்சர் பதவி கிடைக்காது என்று கூறப்படுகிறது. இணை அமைச்சர் பதவியே வழங்கப்படும் எனத் தெரிகிறது.

மலேசியாவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் படாவி தலைமையிலான ஆளும் பாரிசன் தேசியக் கூட்டணிக்குப் பெரும் தோல்வி கிடைத்தது. மலேசியா சுதந்திரமடைந்த பின்னர், முதல் முறையாக, இதுவரை இல்லாத அளவுக்கு மோசமான தோல்வியை பாரிசன் தேசிய கூட்டணி சந்தித்துள்ளது.

பெரும்பான்மை பலம் கிடைத்தாலும் கூட பாரிசன் தேசியக் கூட்டணியால் தன்னிச்சையாக நாடாளுமன்றத்தில் எதையும் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

தமிழர்கள், சீனர்கள் மட்டுமல்லாது, மலாய் இன மக்களும் கூட பிரதமர் படாவி மீது கடும் அதிருப்தியுடன் இருப்பதையே இந்த முடிவு காட்டுகிறது என்பது மலேசிய அரசியல் நிபுணர்களின் கணிப்பு.

ஆனால் இதைக் கண்டுகொள்ளாத பிரதமர் படாவி மறுபடியும் பிரதமராக பதவியேற்றுக் கொண்டுள்ளார். தற்போது புதிய அமைச்சரவையை உருவாக்குவதில் அவர் தீவிரமாக உள்ளார். அடுத்த வாரம் அவர் தனது அமைச்சரவையை அறிவிக்கக் கூடும் எனத் தெரிகிறது.

கடந்த படாவி அமைச்சரவையில் மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவர் டத்தோ சாமிவேலு தொழில்துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் மட்டுமே மலேசிய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த தமிழர்.

ஆனால் தேர்தலில் சாமிவேலு தோல்வி அடைந்து விட்டார். எட்டுமுறை வெற்றி பெற்ற சுங்காய் சிபுட் தொகுதியில் அவர் தோல்வியுற்றார்.

இந்த நிலையில் புதிய அமைச்சரவையில் மலேசிய இந்திய காங்கிரஸுக்கு கேபினட்டில் இடம் இருக்காது என்று கூறப்படுகிறது. துணை அமைச்சர் பதவி மட்டுமே அக்கட்சிக்கு கிடைக்கலாம் என மலேசிய நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தத் தேர்தலில் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சி மொத்தம் 9 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.

புதிய அமைச்சரவை குறித்து பிரதமர் படாவி கூறுகையில், அனைத்து பாரிசன் தேசியக் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னரே அமைச்சரவை இறுதி செய்யப்படும். கேபினட்டில், அனைத்து இனத்தினருக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்படும் என்றார்.

இதற்கிடையே, கடந்த முறையைப் போல் இல்லாமல் இந்த முறை அமைச்சரவை சிறிய அளவிலேயே இருக்கும் என்று தெரிகிறது. இந்த முறை, குறைந்த அளவிலான எம்.பிக்களே இருப்பதே இதற்குக் காரணம்.

கடந்த அமைச்சரவையில் 32 கேபினட் அமைச்சர்கள், 39 துணை அமைச்சர்கள், 20 நாடாளுமன்ற செயலாளர்கள் இருந்தனர். கடந்த நாடாளுமன்றத்தில் பாரிசன் கூட்டணிக்கு 198 எம்.பிக்கள் இருந்தனர். இந்த முறை வெறும் 140 பேரே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X