மீனவர்கள் கடன்-தள்ளுபடி செய்ய ஜெ கோரிக்கை
சென்னை: ரூ. 60,000 கோடி அளவிற்கு விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்த மத்திய அரசு, அதே கருணையை மீனவர்களிடம் காட்டி, சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட வங்கி கடன்களை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கோரியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மீன்பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மீனவர்கள் கடந்த 2004ம் ஆண்டு தமிழகம் இதுவரை கண்டிராத சுனாமி ஆழிப் பேரலையால் தங்கள் இன்னுயிரையும், உடைமைகளையும் இழந்து பெருமளவில் பாதிக்கப்பட்ட நேரத்தில் அவர்களை முதலமைச்சராக இருந்த நான் நேரில் சென்று சந்தித்து ஆறுதல் கூறியதுடன், நிவாரணம், மீட்பு மற்றும் மறு வாழ்வு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுக்க உத்தரவிட்டேன்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், வள்ளம் படகு மற்றும் கட்டுமரம் பயன்படுத்தும் மீனவர்களுக்கு மாற்று மீன்பிடி வலை வாங்குவதற்கும், வள்ளம் படகுகளை பழுதுபார்க்கவும், மறு கட்டுமானம் செய்வதற்கும், சேதமடைந்த கட்டுமரங்களுக்கு மானியம் வழங்குவதற்கும் எனது ஆட்சி காலத்தில் ரூ. 65 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அது மட்டுமல்லாமல், முழுவதும் சேதமடைந்த கட்டுமரங்களுக்கு பதிலாக புதிய கட்டுமரங்கள் மற்றும் புதிய கண்ணாடி இழை கட்டுமரங்கள் வாங்குவதற்கும், முழுவதும் சேதமடைந்த கண்ணாடி இழை கட்டு மரங்களை மாற்றி அமைப்பதற்கும், பழுதடைந்த இயந்திரப் படகுகளை சரி செய்வதற்கும், காணாமல் போன படகுகளுக்கு மானியம் வழங்குவதற்கும் ரூ. 395 கோடி எனது ஆட்சி காலத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான பணிகள் எனது ஆட்சிக்காலத்தில் தொய் வில்லாமல் நடைபெற்று கொண்டிருந்தன.
மேலும், மீனவர்கள் படும் துன்பத்தை அறிந்து, அவர்கள் பயன்படுத்தும் உயர் வேக டீசல் மீதான விற்பனை வரிக்கு 100 விழுக்காடு விலக்கு அளிக்க உத்தரவிட்டேன்.
ஆனால், திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, வங்கிகள் மூலமாக மீனவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவிகளில் தொய்வு ஏற்பட்டு, தற்போது முற்றிலுமாக நின்றுவிட்டதாகத் தெரிகிறது.
இதன் மூலம் எனது ஆட்சிக்காலத்தில் ஒதுக்கப்பட்ட தொகை செலவழிக்கப்படாமல் மீனவர்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள். வங்கிகள் மூலம் வழங்கப்படும் தொகையை திமுக அரசு கண்காணிப்பதாக தெரியவில்லை. மத்திய அரசு இதைப்பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை.
முதல்வர் கருணாநிதி முற்றிலும் மாநில அரசை புறக்கணிக்கும் வகையில் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் மூலமாக ராஜீவ் காந்தி மறுவாழ்வு தொகுப்பு உதவி திட்டம்' என்ற ஒரு திட்டத்தை அறிவிக்க செய்து அந்த திட்டத்தின் மூலம் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கான வாழ் வாதார மறுவாழ்வு நடவடிக்கைகள் பொதுத்துறை வங்கிகளால் மட்டுமே செயல்படுத்தப்படும் என்று ஓர் அறிவிப்பை வெளியிடச் செய்தார்.
திமுக ஆட்சியில் சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்கள் உடைமைகளை இழந்து பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக உள்ளது. 60 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு விவசாயிகளின் வங்கி கடனை தள்ளுபடி செய்த மத்திய அரசு, அதே கருணையை மீனவர்களிடம் காட்டி, சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இதுவரை வழங்கப்பட்ட வங்கி கடனை உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும்,
கடன் வழங்காத மீனவர்களுக்கு முழுத்தொகையையும் மானியமாக வழங்க வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.