அருணா கொலை வழக்கு-சாட்சிகள் விசாரணை முடிந்தது
நெல்லை: ஆலடி அருணா கொலை வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிந்தது. 19ம் தேதி வக்கீல்கள் வாதம் நடைபெறுகிறது. இதையடுத்து விரைவில் தீர்ப்பு கூறப்பட உள்ளது.
முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா மற்றும் அவரது நண்பர் ஆசிரியர் பொன்ராஜ் ஆகியோர் கடந்த 31-12-2004 அன்று ஆலங்குளம் அருகே உள்ள ஆலடிப்பட்டியில் வாக்கிங் சென்றபோது பைக்கில் வந்த சிலர் அவர்களை வழிமறித்து துப்பாக்கியால் சுட்டும் அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.
இந்த வழக்கு முடிந்து இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. சாட்சிகள் விசாரணை முடிவடைந்துள்ளது. இதையடுத்து வரும் 19ம் தேதி வக்கீல்கள் வாதம் நடக்கிறது. அதன் பின்னர் இம்மாத இறுதி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலடி அருணா கொலை வழக்கில் விசாரணை முதலில் நெல்லை மாவட்ட கூடுதல் செசன்சு கோர்ட்டில் நீதிபதி கணேசன் முன்னிலையில் நடந்தது. முதல் 2 சாட்சிகளான பால்ராஜ், ஆத்தியப்பன் ஆகியோர் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பல்டியடித்து விட்டனர்.
4 சாட்சிகள் விசாரிக்கபட்ட நிலையில் இந்த வழக்கை வேறு கோர்ட்டுக்கு மாற்ற வேண்டும் என்று ஆலடி அருணா தரப்பு ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஆனால் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள எஸ்.ஏ.ராஜா தரப்பு வழக்கறிஞர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வழக்கை விசாரிக்க ஐகோர்ட் தடை விதித்தது.
இதனால் இந்த வழக்கில் 6 மாதம் விசாரனை நடைபெறாமல் இருந்தது. இதற்கிடையே வழக்கில் திடீர் திருப்பமாக இதை விசாரித்து வந்த நீதிபதி கணேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பின்னர் சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி இவ்வழக்கு மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டிற்கு மாற்றப்பட்டு மீண்டும் விசாரணை துவங்கியது.












Click it and Unblock the Notifications