பண இரட்டிப்பு மோசடி: 2 பேர் கைது - 5 பேருக்கு வலை
செங்கோட்டை: செங்கோட்டையில் பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி மோசடி செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செங்கோட்டை சேர்வைக்காரன் புதுத் தெருவை சேர்ந்தவர்கள் நாகூரப்பா, பேபி, கருப்பசாமி, சேக், குரங்கு ராஜேஷ், செந்தில்குமார், தங்கப்பா என்ற சேக் முகம்மது. இவர்கள் அனைவரும் நண்பர்கள். அனைவரும் சேர்ந்து சேர்ந்து கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த அடோல்ப் என்ற வாலிபரிடம் ரூ.1 லட்சம் தந்தால் ரூ.2 லட்சம் தருவதாக கூறியுள்ளனர்.
அதனை தொடர்ந்து நேற்றிரவு அடோல்ப் ரூ.1 லட்சத்துடன் குற்றாலம் வந்தார். அங்கு வைத்து இவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டபோது திடீரென போலீஸ் உடையில் ஒரு கும்பல் உள்ளே நுழையவே அனைவரும் தலைதெறிக்க ஓடியுள்ளனர்.
அதைப் பயன்படுத்திக் கொண்டு நாகூரப்பா ரூ. 1 லட்சத்துடன் தப்பி விட்டார். அதன்பிறகுதான் அடோல்புக்கு இது செட்டப் என்று தெரிந்தது. இதையடுத்து குற்றாலம் போலீசில் அவர் புகார் செய்தார்.
குற்றாலம் போலீசார் செங்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவிக்கவே சப்-இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
அதில் செந்தில் குமார், தங்கப்பா என்ற சேக் முகமது ஆகிய 2 பேரும் அவர்கள் பயன்படுத்திய பல ரூபாய் மதிப்புள்ள ஸ்கார்பியோ கார், ஒரு ஆட்டோ, ஒரு யமஹா மோட்டார் சைக்கிள், போலீஸ் உடை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களையும் கைது செய்தனர்.
மற்ற 4 பேர் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இவர்கள் கூட்டாக பலரிடம் மோசடி செய்து சுமார் ரூ. 50 லட்சம் வரை சொத்துகள் சேர்த்து நிலங்கள் வாங்கி போட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இதில் ஈடுபட்டவர்கள் சிலர் பட்டதாரிகள் என்பதும், காவல்துறை குற்றப்பிரிவு போலீசார் சிலருக்கும் இந்த மோசடியில் தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. இச்சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications