ஓகனேக்கலில் எடியூரப்பா ஆர்ப்பாட்டம்
ஓகனேக்கல்: தர்மபுரி மாவட்டம் ஓகனேக்கலில் கர்நாடக அரசியல் கட்சிகள் மீண்டும் விஷமத்தைத் தொடங்கியுள்ளன. இன்று பாஜக மூத்த தலைவர் எடியூரப்பா ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனால் தமிழக, கர்நாடக எல்லையில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழகத்தைச் சேர்ந்த சுற்றுலா தலமான ஓகனேக்கலை தனக்கு சொந்தமானது என்று கர்நாடகம் சமீபகாலமாக பிரச்சினை கிளப்பி வருகிறது. குறிப்பாக கர்நாடகத்தைச் சேர்ந்த பல்வேறு கன்னட அமைப்புகள் கர்நாடக எல்லைக்குள் உள்ள ஓகனேக்கலின் மறு பகுதி வழியாக தமிழகத்திற்குள் நுழைந்து போராட்டம் நடத்த முயற்சிப்பது தினசரி செயலாகி விட்டது.
இந்த நிலையில் தற்போது இந்தப் பிரச்சினையை அரசியல் கட்சிகளும் தங்களது பிழைப்புப் பொருளாக எடுத்துக் கொண்டுள்ளன. காரணம், கர்நாடகத்தில் தேர்தல் நெருங்கி வருவதால் இதைப் பயன்படுத்திக் கொண்டு ஓட்டுக்களை அள்ள அவை திட்டமிட்டுள்ளன.
மேலும், சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்த கூட்டு குடிநீர்த் திட்டத்திற்கும் கர்நாடகம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நேற்று தேவெ கெளடாவின் மதச்சார்பர்ற ஜனதாதளம் கட்சியைச் சேர்ந்த முக்கிய தலைவரும், முன்னாள் அமைச்சருமான சோமசேகர் தலைமையில் அக்கட்சியினர் ஓகனேக்கல் வந்து 'சரச்சைக்குரிய' பகுதியைப் பார்வையிட்டு 'ஆய்வு' செய்தனர்.
இந்த நிலையில் இன்று பிற்பகலில் பாஜக மூத்த தலைவரும், பாஜகவின் முதல்வர் வேட்பாளருமான எடியூரப்பா வருகை தந்தார். அவருடன் ஏராளமான பாஜக தொண்டர்களும் வந்தனர்.
கர்நாடக எல்லையில் நின்றபடி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக நலனுக்கு எதிரான ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று அவர்கள் கோஷமிட்டனர். மேலும் ஓகனேக்கல் கர்நாடகத்திற்குச் சொந்தம் என்றும் கோஷமிட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
எடியூரப்பா தலைமையில் கர்நாடக பாஜகவினர் நடத்திய இந்தப் போராட்டத்தையொட்டி, தமிழக எல்லைப் பகுதியில் மாவட்ட எஸ்.பி. நஜ்முல் ஹோடா தலைமையில் பெருமளவில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.