அமைதி திரும்ப தலாய் லாமா பிரார்த்தனை
திபெத்தில் சுதந்திரப் போர் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தலைநகர் லாசாவில் திபெத்தியர்கள் பெரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதை அடக்க முடியாமல் சீன அரசு திணறி வருகிறது. சீன பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் பலியாகியுள்ளனர்.
சீன அரசின் செயலுக்கு பல்வேறு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இமாச்சலப் பிரதேசம், தர்மசாலாவில் உள்ள திபெத்தியர்களின் வழிபாட்டுத்தலமான 'சங்லான் கானாக்' கோயிலில் தலாய் லாமா இன்று சிறப்பு வழிபாடுகளை நடத்தினார்.
அவர் கோவிலுக்குள்ளே வழிபாடு நடத்திக் கொண்டிருந்தபோது கோவிலுக்கு வெளியே நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் கூடி சீன அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். தர்ணாவிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மெக்லியோகாஞ்ச் பகுதியிலிருந்து தர்மசாலா நோக்கி சீன அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியபடி நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் ஊர்வலம் நடத்தினர்.
தலாய் லாமா நடத்திய பிரார்த்தனையின்போது, லாஸாவில் போராடிவருபவர்களுக்கு ஆதரவு தெரிவித்து அந்த கோயிலின் வெளிப்புறத்தில் நூற்றுக்கணக்கான திபெத்தியர்கள் அமர்ந்து பிரார்த்தனை செய்தனர்.
நிலைமை பதட்டமாக இருப்பதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
திபெத்திலிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த தலாய் லாமா, தர்மசாலாவில்தான் தங்கியுள்ளார் என்பது நினைவிருக்கலாம். தர்மசாலாதான் தற்போது திபெத்தியர்களின் தலைமை இடமாகவும் விளங்கி வருகிறது.