ஐசிசி தலைவராகிறார் ஐ.எஸ்.பிந்த்ரா?
துபாய்: சர்வதேச கிரிக்கெட் வாரிய (ஐசிசி) தலைவர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) முன்னாள் தலைவர் ஐ.எஸ்.பிந்த்ரா நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது.
ஐசிசி தலைமை நிர்வாகியாக தற்போதுள்ள மால்கம் ஸ்பீடின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. ஐசிசி வருடாந்திர பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் அல்லது மாதத்தில் துபாயில் நடக்கவுள்ளது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு தலைமைப் பொறுப்பில் இருந்து ஸ்பீட் விலகுகிறார்.
அவருக்கு அடுத்து தலைமைப் பொறுப்பில் யாரை நியமிப்பது என்பது குறித்து பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில், ஐசிசி தலைவர் ரே மாலி, துணைத் தலைவர்கள் டேவிட் மார்கன், சரத் பவார், கிரக் ஓ கானர் கொண்ட துணைக் கமிட்டியின் பரிந்துரை முன்வைக்கப்படும்.
மால்கம் ஸ்பீட் இடத்திற்கு பிந்த்ராவை நியமிக்க சரத் பவார் பரிந்துரைத்துள்ளதாக தெரிகிறது. எனவே பிந்த்ரா ஐசிசி தலைமை நிர்வாகிப் பொறுப்புக்கு வருவது உறுதியாகிறது.
இக்கூட்டத்தில், இந்தியன் பிரிமீயர் லீக் மற்றும் கபில் தேவ் தலைமையிலான இந்தியன் கிரிக்கெட் லீக் ஆகியவற்றால் கிரிக்கெட் உலகுக்கு ஏற்பட்டுள்ள நன்மைகள், பாதிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படவுள்ளது.
இந்த அமைப்புகள் தொடங்கப்பட்ட பிறகு பல்வேறு நாட்டு பிரபல கிரிக்கெட் வீரர்களும் அணியில் இருந்து ஓய்வு பெறுவது அதிகமாகி விட்டது. பல புகழ் பெற்ற வீரர்களை இழுப்பதில் ஐசிஎல்லும், ஐபிஎல்லும் கடுமையாக போட்டியிட்டுக் கொண்டிருக்கின்றன.
ஆனால், தங்கள் நாட்டு முக்கிய வீரர்களை இழக்க மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் தயாராக இல்லை. இதனால் தங்களுக்கு ஏற்படும் நஷ்டத்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் இழப்பீடு கோரத் தயாராகியுள்ளன. இந்த கோரிக்கை ஐசிசி பொதுக்குழுவில் எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.