தற்கொலையை 'லைவ்' செய்த மாணவர்!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 20 வயது மாணவர் வி.எஸ்.கார்த்திக் என்பவர், தனது காதலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் டெல்லியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தான் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்வதை தனது காதலிக்கு வெப்காம் மூலம் நேரடியாக அவர் காட்டியதால் அவரது காதலி பெரும் அதிர்ச்சி அடைந்தார்.
இணையதள வரலாற்றில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது.
கார்த்திக், டெல்லியில் தங்கிப் படித்து வருகிறார். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருவனந்தபுரம். டெல்லியைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்து வந்தார் கார்த்திக். சமீப காலமாக அவர்கள் இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு அதிகரித்து வந்தது.
இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார் கார்த்திக். இதை தனது காதலி நேரில் பார்த்து வேதனைப்பட வேண்டும் என முடிவு செய்த அவர், தனது ஹாஸ்டல் அறையிலிருந்து வெப்காம் மூலம் காதலியுடன் சாட்டிங்கில் ஈடுபட்டார்.
வழக்கம்போல கார்த்திக்கின் காதலி கடுமையான வார்த்தைகளால் திட்டியபடி இருந்தார். இந்த நிலையில், நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று செய்தி அனுப்பினார் கார்த்திக். இதைப் பார்த்து காதலி அதிர்ச்சி அடைந்தார்.
அவரை சமாதானப்படுத்துவது போல செய்திகளை சரமாரியாக அனுப்பினார். ஆனால் அதைப் பொருட்படுத்தாத கார்த்திக், வெப்காமை மின்விசிறியை நோக்கித் திருப்பினார். இதைப் பார்த்து காதலி மேலும் அதிர்ச்சி அடைந்தார். அலறித் துடித்தார்.
பின்னர் மின்விசிறியில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் கார்த்திக். இந்த பயங்கர சம்பவத்தை நேரில் பார்த்தும், கார்த்திக்கைக் காப்பாற்ற முடியாத அவரது காதலி கண்ணீர் விட்டுக் கதறி அழுதார்.
அடுத்த நாள் காலையில், கார்த்திக்கின் சக நண்பர்கள் அறைக்கு வந்தபோதுதான் அவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரிய வந்தது. வெப்காம் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது.
கார்த்திக்குடன் படிக்கும் சக மாணவர்கள் கூறுகையில், கார்த்திக் எப்போதும் யாருடனும் அதிகமாக பேச மாட்டார். எதையுமே மனதுக்குள் வைத்துப் பூட்டிக் கொள்வார். அவருக்கும், அவரது காதலிக்கும் இடையே உறவு சரியில்லை என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் என்ன நடக்கிறது என்பது எங்களுக்கு முழுமையாகத் தெரியாது என்றார் அவர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.