நாளை சட்டசபை கூடுகிறது-மறுநாள் பட்ஜெட்
சென்னை: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. நாளை மறுதினம் நிதியமைச்சர் அன்பழகன் 2008-09ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்.
நாளை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியதும், மறைந்த முன்னாள் சபாநாயகர் ராஜாராம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் முன்னாள் எம்.எல்.ஏ. ஹேமச்சந்திரன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒரு நாள் ஒத்தி வைக்கப்படும்.
இதையடுத்து நடக்கும் அலுவல் ஆய்வு குழுக் கூட்டத்தி்ல் சட்டமன்ற கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது முடிவு செய்யப்படும்.
இதையடுத்து நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை நிதியமைச்சர் அன்பழகன் 2008-09 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்வார். இம்முறை திமுக ஆட்சிக்கு வந்த தாக்கலாகும் 3வது பட்ஜெட் இது.
இந்தக் கூட்டத் தொடரில் பால்விலை உயர்வு, தமிழ்நாடு மின்சார வாரியத்தை இரண்டாக பிரிப்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த கூட்டத் தொடர் மே மாதம் முதல் வாரம் வரை நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. போஸ் கடந்த ஆண்டு நடந்த கூட்டத்தில், சபாநாயகர் மீது தொப்பி வீசியதற்காக சபை நடவடிக்கைகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டார். தடை விதிக்கப்பட்ட காலம் முடிவடைந்து விட்டதால் நாளை அவர் சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார் எனத் தெரிகிறது.
மத்திய பட்ஜெட்டைப் போலவே தமிழக பட்ஜெட்டிலும் பல்வேறு சலுகைகள் இடம் பெற்றிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 2 மாதங்களுக்கு நடைபெறும் பட்ஜெட் கூட்டத் தொடரில் 55 மானியக் கோரிக்கைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிகிறது.
பகைமையுடன் இருக்கும் தோழமைக் கட்சியான பாமக, சட்டசபைக் கூட்டத் தொடரில் திமுகவுக்கு நெருக்கடியைக் கொடுக்கும் வகையில் பல்வேறு பிரச்சினைகளை எழுப்பக் கூடும் என்று தெரிகிறது.
அதேபோல எதிர்க்கட்சியான அதிமுக, இந்த முறை என்ன மாதிரியான 'குண்டுகளை' சட்டசபையில் போடப் போகிறது என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
பல்வேறு சூடான பிரச்சினைகள், அரசியல் சூழ்நிலைகளுக்கு மத்தியில் கூடும் பட்ஜெட் கூட்டத் தொடர் படு சூடாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.