எரையூரில் ஜாதிக் கலவரம்- வீடுகளுக்குத் தீவைப்பு

விழுப்புரம் மாவட்டம் எரையூர் கிராமத்தில் சர்ச்சில் வழிபாடு செய்வது தொடர்பாக தலித் கிறிஸ்தவர்களுக்கும், வன்னிய கிறிஸ்தவர்களுக்கும் இடையே சமீபத்தில் பெரும் மோதல் வெடித்தது.
இரு தரப்பினரும் சர்ச்சுக்கு முன்பாக பெரும் வன்முறையில் இறங்கினர். இதையடுத்து வன்முறையை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியானார்கள். 19 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக 1000க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எரையூரில் உள்ள ஆண்கள் அனைவரும் கிராமத்தை விட்டு தலைமறைவானதால் நிலைமை மேலும் பதட்டமடைந்தது.
இந்த நிலையில் இன்று காலை அந்தோணிச்சாமி, சவரிராஜன் ஆகிய இருவரது வீடுகளையும் ஒரு கும்பல் தீவைத்துக் கொளுத்தியது. இந்த தீவிபத்தில் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட நெல், மஞ்சள் உள்ளிட்ட மூடைகள் தீயில் எரிந்து சாம்பலாயின. 6 பவுன் நகைகளும் தீயில் கருகின.
தீயணைப்புப் படையினருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்து வந்தனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்தப் புதிய தாக்குதலால் எரையூர் கிராமத்தில் பரபரப்பும், பதட்டமும் நிலவுகிறது. மாவட்ட எஸ்.பி. அமல்ராஜ் எரையூர் விரைந்துள்ளார். போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
தீவைத்தது யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications