துபாய்: விரைவில் குறைந்த கட்டண விமான சேவை
துபாய்: நடுத்தர வர்க்கத்தினரை ஈர்ப்பதற்காக குறைந்த கட்டண விமான சேவையை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அரசு விரைவில் தொடங்குகிறது.
துபாய் உள்பட ஐக்கிய அரபு எம்ரேட்ஸின் முக்கிய நகரங்களில் இருந்து ஏராளமானவர்கள் விமானங்கள்மூலம் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்கின்றனர். இதில் நடுத்தர வர்க்கத்தினர் கணிசமாக உள்ளனர். பெரும்பாலும் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படும் விமானங்களையே இவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர்.
ஏர் இந்தியாவின் எக்ஸ்பிரஸ், ஷார்ஜாவின் பிரபல ஏர் அரேபியா ஆகிய விமான சேவைகள் குறைந்த கட்டணத்தில் இயக்கப்படுவதால் பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
குவைத்தில் இருந்து இயக்கப்படுகின்ற ஜஸீரா ஏர்லைன்ஸின் குறைந்த கட்டண சேவை அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்துக்குள் ஏகப்பட்ட டிமாண்டை பெற்றுள்ளது.
இந்த நிலையில், துபாயில் புதிய விமானப் போக்குவரத்து நிறுவனத்தை விரைவில் தொடங்குவதற்கு துபாய் ஆட்சியாளரும், ஐக்கிய அரபு எம்ரேட்ஸின் பிரதமருமான ஷேக் முகமது பின் ரஷீத் அலி மக்தும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிறுவனத்தின் கீழ் குறைந்த கட்டண விமான சேவைகள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
யு.ஏ.இ.யின் முக்கிய விமான நிறுவனமான எமிரேட்ஸ் உடன் இணைந்து புதிய நிறுவனம் செயல்படும். இரு நிறுவனங்களுக்கும் பொதுவான தலைவர் நியமிக்கப்படுவார்.
பயணிகளிடம் குறைந்த கட்டண சேவைக்கான ஆதரவு பெருகி வரும்நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.