ரகசியமாய் தமிழகம் வந்து சென்ற பிரியங்கா

வேலூர் தங்கக் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு உடனே அவர் டெல்லி திரும்பினார்.
வேலூர் அருகே அரியூரில் ஸ்ரீநாராயணி பீடம் சார்பில் கட்டப்பட்டுள்ள தங்கக் கோவில் உலகளவில் பிரபலமாகி வருகிறது. சமீபத்தில் இந்த கோவில் சார்பில் நடைபெற்ற விழாவில் முதல்வர் கருணாநிதியும் கலந்து கொண்டார்.
இந் நிலையில் நேற்று காலை 10 மணியளவில் டெல்லியில் இருந்து வந்த ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் சென்னை வந்திறங்கினார் பிரியங்கா.
அவருடன் இரு எஸ்.பி.ஜி. பிரிவு கமாண்டோக்கள் சாதாரண உடையில் வந்தனர். அவரது வருகை மிக மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தமிழக உளவுப் பிரிவினர் தவிர வேறு யாருக்கும் இந்தப் பயணம் குறித்த விவரம் தெரியாது.
சென்னையில் வந்திறங்கிய பிரியங்கா உளவுப் பிரிவினர் ஏற்பாடு செய்த சாதாரண காரில் வேலூர் கிளம்பினார். இந்தக் காருக்கும் முன்னும் பின்னுமாக இரு கார்களில் ஆயுதம் தாங்கிய உளவுப் படை போலீசார் சென்றனர்.
ஆனால், யாருக்கும் சந்தேகம் வராதபடி மிக சாதரண கார்களே பயன்படுத்தப்பட்டன.
வேலூர் செல்லும் வழியில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில் காரை நிறுத்தி இறங்கிய பிரியங்கா அங்கு தனது தந்தைக்கு அஞ்சலி செலுத்திவிட்டு உடனே புறப்பட்டார்.
தலையில் துப்பட்டா போட்டிருந்த அவரை யாரும் அடையாளம் காணவில்லை.
பகல் 12.30 மணி அளவில் அவர் வேலூர் தங்கக் கோவிலுக்கு வந்த அவர் வரிசையில் நின்று தரிசனம் செய்தார். மகாலட்சுமி சன்னதி முன் மட்டும் சுமார் 10 நிமிடங்கள் அவர் தரிசனம் செய்தார்.
பின்னர் கோவிலை சுற்றிப் பார்த்துவிட்டுக் கிளம்பினார். கோவிலைச் சுற்றி மட்டும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆனால், அங்கு நின்றிருந்த போலீசாருக்கு வரப் போவது யார், வந்து சென்றது யார் என்று தெரியவில்லை. அந்த அளவுக்கு ரகசியம் காக்கப்பட்டது.
1.15 மணியளவில் அங்கிருந்து மீண்டும் காரில் புறப்பட்டு சென்னை விமான நிலையம் வந்த பிரியங்கா மாலை 5.30 மணி விமானத்தில் டெல்லி திரும்பினார்.












Click it and Unblock the Notifications