நெல்லை, தூத்துக்குடியில் கொலைக் குற்றங்கள் குறைவு - டிஐஜி
நெல்லை: கடந்த ஆண்டுகளோடு ஒப்பிடும் போது, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் தற்போது கொலைச் சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளதாக நெல்லை சரக டிஐஜி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஜாதி, மத மோதல்களால் அடிக்கடி கலவரமும், கொலைகளும் நடப்பது சகஜமானது. கடந்த 2007ம் ஆண்டு நெல்லை மாநகரில் 10 கொலைகளும், புறநகர் மாவட்டத்தில் 80 கொலைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 60 கொலைகளும் நடந்துள்ளன. இது கடந்த ஆண்டுகளை விட குறைவு என்று காவல்துறை டிஐஜி கண்ணப்பன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த ஆண்டு நடந்த 150 கொலைகளில் பெரும்பாலானவை குடும்ப பிரச்னைக காரணமாக நடந்தவை. நெல்லை மாவட்டத்தில் 45 சதவிகித கொலைகளும், தூத்துக்குடி மாவட்டத்தில் 50 சதவிகித கொலைகளும் குடும்ப உறுப்பினர்களால் நடந்துள்ளன.
சுமார் 20 சதவிகித கொலைகள் பழிவாங்கும் நோக்கில் நடந்துள்ளன. தற்போது ஜாதி மத மோதல்களால் நடக்கும் கொலைகள் வெகுவாக குறைந்துள்ளன. 3 சதவிகித கொலைகள் மட்டுமே ஜாதி மத மோதலில் நடந்துள்ளது. மற்ற கொலைகள் பல்வேறு காரணங்களால் நடந்துள்ளன.
குடும்ப உறுப்பினர்களால் நடத்தப்படும் கொலைகள் பெரும்பாலும் சொத்து பிரச்சனை, தவறான நடத்தை போன்றவைகளால் நடக்கிறது. இனி வரும் காலங்களில் இதுவும் குறையக் கூடும் என்றார்.












Click it and Unblock the Notifications